பீகார்: பீகார் முன்னாள் முதல்வர் லாலுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது என்பதால் நடிகர்கள் தேர்வும் சுறுசுறுப்பாக நடக்கிறது. பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவருமான லாலு பிரசாத் யாதவ், பல்வேறு ஊழல் வழக்குகளில் சிறைவாசம் அனுபவித்து தற்போது ஜாமீனில் உள்ளார். அவரது அரசியல் வாழ்க்கையை மையமாக வைத்து சினிமா படம் எடுக்க சிலர் முயன்றுள்ளனர். இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகையில், ‘லாலுவின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் சினிமா படம் எடுக்கப்படுகிறது. அதற்கான பணிகள் கடந்த 5-6 மாதங்களாக நடந்து வருகிறது.
லாலுவின் குடும்பத்திடமிருந்து ஸ்கிரிப்ட்களின் உரிமைகள் கோரப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பிரகாஷ் ஜா தயாரிக்கிறார். லாலுவின் மகன் தேஜஸ்வி பிரசாத், இந்த திரைப்படத்திற்கான நிதியுதவியை வழங்குகிறார். இந்தப் படத்தில் அவரும் நடிக்க வாய்ப்புள்ளது. திரைக்கதைக்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. நடிகர்கள் தேர்வும் விரைவில் தொடங்கும். இந்தி பேசும் மாநில நடிகர்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளோம்’ என்றனர். இதுகுறித்து ஆர்ஜேடி கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் சித்ரஞ்சன் ககன் கூறுகையில், ‘லாலு பிரசாத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது என்றால் நல்ல விஷயம்தான்.
லாலுவின் வாழ்க்கை குறித்தும், சமூக நீதிக்காக அவர் அமைதிப் புரட்சியை ஏற்படுத்தியவர். அதனால் அவரது வாழ்க்கை வரலாறு படம், அனைத்து தரப்பு மக்களிடையேயும் வரவேற்பை பெறும்’ என்றார். ஏற்கனவே லாலுவின் வாழ்க்கை குறித்து நிறைய புத்தகங்கள், திரைப்படங்கள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.