Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோடையில் சருமப் பராமரிப்பு!

நன்றி குங்குமம் தோழி

கோடைகாலம் துவங்கிவிட்டது. சித்திரை மாதம் துவங்கும் முன்பே சூரியன் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. சூரியனின் வெப்பம் மட்டுமில்லாமல், கோடை வெயிலினால் ஏற்படும் அனல், வெப்பக்காற்று, பறக்கும் புழுதி அனைத்தும் நம்முடைய அழகினை பாதிக்கக்கூடிய காரணிகள். சருமத்தின் நிறத்தை மங்கச் செய்து, தோற்றத்தை முழுமையாக பாதிக்கச் செய்கிறது. இதற்கான சில இயற்கை டிப்ஸை வீட்டிலேயே செய்து பயன்படுத்தலாம்.

*வெயிலில் சென்று வீடு வந்ததும் முகத்தில் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் மாஸ்க் போல பூசி இருபது நிமிடங்கள் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முகச்

சுருக்கம் நீங்கும்.

*தயிரில் சிறிது கடலை மாவு, ஆரஞ்சு தோல் பொடி கலந்து முகத்தில் பூசி ஊறவிட்டு கழுவினால் முகம் பொலிவு பெறும்.

*வெயிலால் முகம் வறட்சி அடைவதை தடுக்க கிர்ணிப் பழம் அல்லது தர்பூசணி சாறை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் மென்மையாகும்.

*எண்ணெய் பசை முகம் உள்ளவர்கள் வெயிலில் சென்று விட்டு வந்ததும் தயிர், கடலை மாவு, எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் வழிவது நின்று முகம் பளபளக்கும்.

*பப்பாளிப் பழத்தை மசித்து அதை முகத்தில் பூசி குளித்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் உதிர்ந்து முகம் மின்னும்.

*செம்பருத்தி இலையை அரைத்து தயிரில் கலந்து தலைமுடியில் தடவி அரைமணி நேரம் ஊறவைத்து குளித்தால் உடல் குளிர்ச்சியடைவதுடன் கூந்தலும் மிருதுவாகும்.

*வெயில் காலத்தில் வியர்வையால் பொடுகுத் தொல்லை ஏற்படும். இதற்கு சிறிது வேப்பிலை, மூன்று சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து தலையில் தடவி ஊற வைத்து கால் மணி நேரம் கழித்து தலையை அலசினால் அரிப்பு, பொடுகு நீங்கி முடியும் மென்மையாகும்.

*சிறிது வேப்பிலையை கொதிக்கும் நீரில் போட்டு காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி இலையை அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வேப்பிலை நீரால் முகத்தை கழுவினால் வெயிலால் ஏற்படும் கருமையை போக்கும்.

*தர்பூசணி பழத்தின் வெண்மை நிற பகுதியை முகம், கைகளில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர சரும சுருக்கங்கள் மறைந்து பொலிவு பெறும்.

*உடலில் ஏற்படும் அரிப்பு நீங்க தண்ணீரில் வேப்பிலைப் பொடி, துளசி, மஞ்சள் பொடி கலந்து குளித்து வர அரிப்பு நீங்கும்.

*உடலில் வியர்க்குரு பிரச்னை ஏற்பட்டால் நுங்கு நீரை உடலில் தேய்த்து ஊற வைத்து குளித்து வந்தால் வேர்க்குரு மறையும்.

*சந்தனத்தை கரைத்து வியர்க்குரு உள்ள இடத்தில் பூசிவர வியர்க்குரு மறைந்து விடும். இதனை வெயில் காலத்தில் செய்து வர முகம் மற்றும் உடல் பொலிவு பெறுவதோடு ஆரோக்கியமாகவும் இருக்கும்.

தொகுப்பு: பிரியா மோகன், சென்னை.