Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

அசையும் முகமூடிகள்

நன்றி குங்குமம் தோழி

‘‘கற்பனையான அசைவுகளை மிகைப்படுத்திக் காட்டும் மைம் கலை முற்றிலும் மௌனமானது. இதில் ஒரு சின்ன சத்தம் கூட இருக்காது.முன்னெல்லாம் பாட்டி கதை சொன்னால் ஒவ்வொருத்தரும் மனசுலயும் ஒரு பாட்டிய, ஒரு கிராமத்தை கற்பனை பண்ணிப்போம். ஒரே கதைக்கு ஆயிரம் கற்பனை வடிவங்கள் அதில் இருக்கும். இன்று யு டியூப்பில் ஒரு கதைய பார்த்தா அந்தக் கதையில வர பாட்டி, அந்த வீடு, அந்த ஒரு பிம்பமே எல்லா குழந்தைங்க மனசுலயும் பதியுது. கற்பனைக்கான வேலையே இப்ப இல்ல. இந்த வேலையைதான் பாவனை நாடகம்(Mime) மாதிரியான கலைகள் திரும்ப உருவாக்குது’’ என பேச ஆரம்பித்தவர் மதுரையை சேர்ந்த மைம் கலைஞர் உமேஷ்.

‘‘உடல் மொழியை கலையா பார்க்கிற பார்வை நம்மகிட்ட ரொம்ப காலமாக இருந்திருக்கு. தொல்காப்பியத்தில் நகை, அழுகை, இழிவரல், மருட்கை, அச்சம் என எட்டு மெய்ப்பாடுகள் உண்டு. இது வெறும் உணர்ச்சிகள் இல்லை. உணர்ச்சிகளோட வெளிப்பாடு. ஒரு உணர்ச்சி எப்படி உடம்புல தெரியணும்னு தொல்காப்பியம் இலக்கணம் சொல்லுது. இதுதான் பாவனை நாடகமான மைம் கலைக்கும் அடிப்படை’’ என்றவர், வார்த்தைகளே இல்லாத மௌனம் குழந்தைகளோட தன்னம்பிக்கைக்கும், படைப்பாற்றலுக்கும் எப்படி ஒரு சக்தி வாய்ந்த கருவியா இருக்கு என்பதை மேலும் விளக்க ஆரம்பித்தார்.

‘‘ஒரு நாடகத்துல பெரிய செட் இருக்கும். காஸ்டியூம்ஸ் இருக்கும். வசனம் இருக்கும். கட்டியக்காரன் முதலில் வந்து ‘‘மன்னர் வரார்... வரார்’’ன்னு சொல்லுவான். நமக்கெல்லாம் மன்னர் வருகை தெரிஞ்சிரும். ஆனா, பாவனை நாடகத்துல கலைஞர் தனியாக நிற்பார். அவரிடம் இருப்பது அவரோட உடம்பு. அப்புறம் நாடகத்தைப் பார்க்கிற பார்வையாளர்களின் கற்பனை. அவ்வளவுதான். அதுதான் இந்தக் கலையோட சவாலும் அழகும். பார்வையாளர்களை அவர்களின் கற்பனை உலகிற்கு அழைத்துச் செல்வதுதான் கலையின் நோக்கம். கற்பனையை தூண்டுற கருவி மைம் கலைஞரின் உடம்பு.

பாவனை கலையை உலகளாவிய மொழின்னும் சொல்லலாம். சிரிப்பு, அழுகை, கோபம் இதெல்லாம் எல்லாருக்கும் பொதுவானதுதான். உணர்ச்சிகளுக்கு மொழி கிடையாது என்பதால், அடிப்படை உணர்ச்சிகளை அடித்தளமா வச்சுக்கிட்டு எல்லோருக்கும் புரியிற மாதிரி பொதுவான வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உடல் மொழியை கலைஞன் இதில் பயன்படுத்தணும். அதனாலதான் சார்லி சாப்ளினை

எல்லோரும் கொண்டாடுறோம்.

ஒரு மியூசிசியன் நல்ல வயலின் வாங்கலாம். ஒரு ஓவியர் நல்ல தூரிகைய தேர்ந்தெடுக்கலாம். ஆனால், ஒரு பாவனைக் கலைஞன் தன் கருவியை தானேதான் உருவாக்கணும். தானே செதுக்கணும். உதாரணத்துக்கு சூடா ஒரு டீ குடிக்கிற மாதிரி நடிக்கும் போது சும்மா உதடு சுடுற மாதிரி நடிச்சா பத்தாது. அந்த டீயோட சூடு நிஜமாவே தொண்டைக்குள்ள இறங்குறத அவர் உணரணும். இதை மௌன மொழியாய், தன் உடல் அசைவில் வெளிப்படுத்தணும். கரடு முரடான பாதையில அவர் நடக்கறதா பாவனை செஞ்சா, கல்லு குத்துற வழியை உள்ளங்கால்ல உண்மையா உணரணும். அந்த உணர்வை உள்வாங்கினாதான் நடிப்பு அவருக்கு இயல்பா வரும்.

வகுப்பில் மாணவர்களிடம் ‘ஒரு பெரிய மரத்தைக் கட்டிப்பிடிக்கிற மாதிரி நில்லுங்க’ன்னு சொன்னா, ஒரு குழந்தை ஆலமரத்தை நினைக்கும். இன்னொரு குழந்தை தென்னை மரத்தை நினைக்கும். 100 குழந்தைங்க இருந்தா 100 விதமான மரங்கள், 100 விதமான அணைப்புகள் கற்பனைக்குள் வரும். இதுதான் கற்பனையை தூண்டுறது. இது உணர்ச்சியின் மொழி, கற்பனையின் வெளிப்பாடு, உடல் மன ஒருங்கிணைப்போட உச்சம். ஒரு பொருளை பார்த்து வரையறத விட அந்தப் பொருளாகவே தன்னை மாத்திக்கிறதுங்கறது படைப்பாற்றலோட உச்சம்.

ஒரு நொடியில நீங்க எல்லோரும் ஒரு மரம்னு சொன்னா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான மரமா மாறுவாங்க. ஒரு பேருந்துன்னு சொன்னா ஒருத்தர் டிரைவர், ஒருத்தர் கண்டக்டர், சிலர் பயணிகள், சிலர் ஜன்னல், சிலர் டயர்னு ஒரு முழு பேருந்தே உருவாக்கிடுவாங்க. இதில் குழந்தைங்க இயல்பா தங்களோட அடையாளத்தை மாத்திக்கிறாங்க. ஆகவே, குழந்தைகளின் கற்பனையை தூண்டுற பயிற்சிகள் இதில் நிறைய உண்டு. கையில தேன் ஊத்துனா எப்படி இருக்கும்? பாதரசம் பட்டா உடல் எப்படி சிலிர்க்கும்? பந்தே இல்லாமல் ஃபுட்பால் விளையாடுறதுன்னு பல பயிற்சிகள் உண்டு.

சாதாரண நாடகத்துல வசனம் மறந்துட்டா குழந்தைக்கு பயம் வரும். இங்க வசனமே கிடையாது. அதனால தப்பு பண்ணிருவோமோங்கிற பயம் அவர்களுக்கு அறவே இல்லை. இரண்டாவது முகத்துல போடுற மேக்கப் குழந்தைகளுக்கு தைரியத்தைக் கொடுக்குது. நான் நானா இல்ல வேற ஒரு கதாபாத்திரமா இருக்கேங்கிற உணர்வு அவங்களோட கூச்ச சுபாவத்தை உடைச்சு இயல்பா செயல்பட வைக்குது.நான்ங்கிற அகந்தையை உடைப்பதில் இது முதல் படி. என் பேர் இது. நான் இப்படித்தான் இருப்பேன். எனக்கு கூச்ச சுபாவம்ங்கிற எண்ணங்களை உடச்சு ஒரு கலைஞனா ஒரு மூணாவது மனுஷனா தன்னை கவனிக்க கத்துக் கொடுப்போம். எல்லோருக்கும் ஒரே மாதிரி வெள்ளை முக ஒப்பனை. ஒரே மாதிரி கருப்பு உடை. யாரும் இங்க அழகா இல்ல. அசிங்கமா இல்ல. யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் கிடையாது. தோற்றத்தை வச்சு வர்ற தாழ்வு மனப்பான்மைக்கு இடமே இல்லை.

எல்லோரும் ஒன்னுங்கிற எண்ணம் குழு மனப்பான்மையை அழகா வளர்க்குது. குழுவா சேர்ந்து குழந்தைங்க செய்யற பயிற்சிகள், ஒருத்தருக்கு ஒருத்தர் உதவுறதுன்னு, அவங்களுக்குள்ள ஒரு உண்மையான தன்னம்பிக்கையை உருவாக்குது. பாவனை நாடகத்துல ஏன் முகத்துல வெள்ளை நிறம் பூசுறாங்கன்னா, நாடகத்தோட ஆதாரமே முக பாவனைதான். சாதாரணமா சிரிக்கிறதுக்கும் மைம் கலை வழியா சிரிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு. மிகைப்படுத்தப்பட்ட உணர்வுகளை அந்த வெள்ளை முகம் அப்பட்டமா காட்டி கொடுத்துரும். முகமூடி அசைவது போல ஒரு பிரம்மாண்டமான தோற்றத்தை கொடுக்கும். முகமென்ற வெண்பலகையில் புருவத்தோட சின்ன அசைவு, உதட்டோட சுழிப்பு, கண்ணுல தெரியிற ஆச்சரியம்னு எல்லா உணர்ச்சிகளும் தெளிவா மிகைப்படுத்தப்பட்டு பார்வையாளர்களுக்கு போய் சேரும்.

வெளிப்படையா சொன்னா, அன்றாட வாழ்க்கையில் நாம எல்லோருமே பாவனை கலைஞர்கள்தான். நான் ஒரு அப்பா, நான் ஒரு அதிகாரி, நான் ஒரு ஆசிரியை என நமக்கு நாமே முகமூடியை நிரந்தரமாக மாட்டுறோம். இன்னும் கண்ணுக்குத் தெரியாத முகமூடிகளை மாட்டிக்கொண்டு சுற்றுகிறோம். குறிப்பிட்ட ஒரு அடையாளத்துக்குள் நம்மை நாமே சுருக்கிக் கொள்ளும் போது, குழந்தைகளிடம் இயல்பாய் இருக்கும் படைப்புத் திறனை ஏற்கும் நெகிழ்வுத் தன்மையை நாம் இழக்கிறோம்.’’

அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்!

- உமேஷ், மைம் கலைஞர் மற்றும் பயிற்சியாளர்.

‘‘பிஎஸ்சி ஐ.டி முடித்து தனியார் நிறுவனத்தில் சிஸ்டம் இன்ஜினியரா பணியில் இருந்தவன் நான். கல்லூரி மாணவனாக வலம் வந்தபோதே, திரைப்படக் கலைஞர் மைம் கோபி அவர்களின் பயிற்சிப் பட்டறையில் தேர்வாகி, பயிற்சியை முறையாக எடுத்துக் கொண்டேன்.கைப்பேசிகள் குழந்தைகளின் கற்பனைத் திறனை குறைக்கும் இந்தக் காலகட்டத்தில், மைம் கலையை அடுத்த தலைமுறைக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு கொண்டு சேர்க்க நினைத்தே, கற்பவர்களையும் கற்றுக்கொடுப்பவர்களையும் இணைக்கும் பாலமாக, மதுரை நாராயணபுரத்தில் எனது இந்தப் பயிற்சி மையத்தை ஆரம்பித்தேன்.

சமூக விழிப்புணர்வுக்காகவும், குழந்தைகளின் கற்பனை திறனை வளர்க்கவுமே என்னுடைய இந்த மையத்தை பயன்படுத்தி வருகிறேன். கூடவே மதுரையில் உள்ள பல்வேறு பள்ளிகளிலும் நாடக ஆசிரியராகவும் இருக்கிறேன். நான் பணியாற்றி வந்த எனது ஐ.டி தொழிலை இதற்காகவே துறந்தேன்.’’

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்