Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தோழமை உணர்வு திருமணத்தின் அடிப்படை!

நன்றி குங்குமம் தோழி

இரு மனங்கள் இணைவது மட்டுமே திருமணமாகாது. வேறுபட்ட வாழ்க்கையை சேர்ந்த இருவர்கள் உறவில் ஒன்றிணைந்து, தங்களுக்குள் இருக்கும் புரிதலை உறுதிப்படுத்திக்கொள்ளும் போது, ஆரோக்கியமான பிணைப்பு, நீண்டகால மகிழ்ச்சிக்கு அடித்தளமாகிறது. இச்சூழலில், திருமண வாழ்க்கைக்கான ஆலோசனைகளை எடுத்துக்கொள்வதில் தம்பதிகளும் குறிப்பாக அவர்களின் பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். திருமண பந்தத்தை சீராக்க சில ஆலோசனைகளுக்காக உளவியலாளர் மற்றும் உறவுமுறை ஆலோசகரான மஞ்சு சரவணாவிடம் உரையாடினோம்.

திருமண ஆலோசனை அவசியமா?

திருமணத்திற்கு முன் ஆலோசனைகள் எடுப்பது வழக்கமானதாக இருந்ததில்லை. இன்று சிலருக்கு இது தேவையாக மாறி வருகிறது. திருமணம் செய்து கொள்ளப்போகும் தம்பதியினருக்கு இடையே ஏதோ ஒரு வகையில் சமநிலை குறையும் போதோ அல்லது இந்த உறவு நீடிக்குமா என்ற பயம் வரும் போதோ ஆலோசனையை நாடுகிறார்கள். பெரும்பாலும் நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு இருவருக்குள்ளும் ஏற்படும் சில பிரச்னைகள் காரணமாக பெற்றோர்களே பிள்ளைகளிடம் ‘ஒருமுறை கவுன்சிலிங் எடுத்துப் பார்த்துட்டு வாங்க’ என்று கூறுகிறார்கள்.

சமயங்களில் இந்த உறவு சரிவராது என்று தெரிந்த பிறகும் ஒருவர் மற்றொருவருக்கு கடைசியாக ஒரு வாய்ப்பளித்து பார்ப்போம் என்ற எண்ணத்தில் ஆலோசகரை நாடுகின்றனர். காதல் திருமணங்களை பொறுத்தவரை, உணர்வு ரீதியான சிக்கல்களை விட நிதி நிலைமை மற்றும் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளுதல் போன்ற பிரச்னைகளுக்காகவே ஆலோசனைகள் பெறப்படுகின்றன. பொதுவாக திருமணம் முடிவான பிறகு அவர்களின் முடிவிலிருந்து பின்வாங்குவதற்கான சூழ்நிலை ஏற்படும்போது திருமணத்திற்கு முன் ஆலோசனை அவர்களுக்கு தேவைப்படுகிறது.

துணையை தேர்ந்தெடுப்பதில் தெளிவு!

ப்ரீ-மேரிட்டல் கவுன்சிலிங்... இன்றைய காலகட்டத்தில் ஒரு துணையை தேர்ந்தெடுப்பதற்கு முன்பே ஆலோசனையை பெறுவது. குறிப்பாக, கடந்த கால உறவுகளில் ஏமாற்றமடைந்தவர்கள், நம்பிக்கை சார்ந்த பிரச்னைகள் உள்ளவர்கள் அடுத்தவொரு உறவுக்குள் நுழைவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். திருமண தகவல் மையங்கள் மூலமாக வரன் தேடுகிறவர்கள், வரனை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் ஏற்படும் போது ஆலோசகரை நாடுகின்றனர்.

உணர்ச்சி ரீதியாக சோர்வாக இருப்பவர்களுக்கும் கவுன்சிலிங் உதவுகிறது. திருமண வரன் முடிவாகி இருவரும் பேசத் தொடங்கி சில நாட்களுக்குள் அவர்களுக்கு ஏதேனும் மனக்கசப்புகள் ஏற்படும் போது உடனே முறித்துக்கொள்ளும் முடிவை எடுக்காமல் பொறுமையாக இருந்து இதனை சரி செய்ய முடியுமா எனும் முயற்சியில் ஆலோசனைகளை எடுக்கின்றனர். இதில் 70% பிரச்னையை சரி செய்து உறவை தொடர்கின்றனர்.

உண்மையாகவே உறவில் சிக்கல் உள்ளது, குறிப்பிட்ட இருவர் சேர்ந்து வாழ்வதில் அதிகப்படியான சாத்தியம் இல்லையென்பதோ, அதற்கான மனநிலையோ சூழ்நிலையோ இல்லையென்றால் அதையும் அவர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டியதும் ஆலோசகரின் கடமை. வீடு மற்றும் சமூகத்தின் கட்டாயத்தினால் மட்டுமே திருமணம் செய்வதை தவிர்ப்பதே நல்லது.

கவனிக்க வேண்டிய அறிகுறிகள் (Red & Green Flags)

இரு நபர்கள் சந்தித்து பழக தொடங்கியதும், ஒருவரின் சிறு சிறு செயல்கள் மூலமாகவே அவர்களின் இயல்பான குணம் வெளிப்படும். அச்சமயங்களில் தோன்றும் அறிகுறிகளை நிச்சயம் கவனிக்க வேண்டும். உணர்வு ரீதியாக, வார்த்தைகள் மூலம் துஷ்பிரயோகம் செய்வது, திடீர் கோபம், போதைப் பழக்கம், கேம்பளிங், ஆபத்தான டிரேடிங், சூதாட்டம் போன்றவை அபாய அறிகுறிகள். இத்தகைய குணங்கள் இருப்பதை உணர்ந்தால், திருமணத்திற்கு முன் மீண்டும் ஒருமுறை யோசிப்பது நல்லது. மனதிற்குள் எதையும் வைத்துக் கொள்ளாமல், வெளிப்படையாகவும் பண்பாகவும் உணர்வுகளை பகிரும் ‘எமோஷனல் மெச்சூரிட்டி’ உள்ளவர்கள் சிறந்த துணையின் அடையாளம்.

திருமணத்திற்குப் பின் வரும் சவால்கள்...

திருமணமாகி ஒரே மாதத்தில் தம்பதிகள் கவுன்சிலிங்கிற்கு வருவதுண்டு. 60 வயதுடைய தம்பதிகளும் வருகிறார்கள். பொதுவாக திருமணத்திற்குப் பின் ஏற்படக்கூடிய சிக்கல்... ஒன்று நிதி சார்ந்த பொறுப்புகள், இரண்டாவது பெற்றோரின் தலையீடு. எல்லாவற்றுக்கும் பெற்றோர்களை அதிகம் நாடுவதே இந்த சிக்கல் உருவாக அடிப்படை காரணம். கணவன் - மனைவி உறவை தக்கவைத்துக் கொள்வதே கடினமாக இருக்கும் சூழலில் உறவினர்களின் தலையீடுகளால் பிரச்னைகளோடு ஆலோசனைக்கு வருபவர்கள் அதிகம்.

ஒரு கூட்டுக்குடும்ப வாழ்க்கையில், பல வருடங்களாக ஒருவரின் பராமரிப்பில் இருக்கும் கிச்சனில் இன்னொரு பெண் வந்து சிறிது மாற்றங்களை செய்தால் அங்கு விருப்பு வெறுப்புகள் சார்ந்த பிரச்னைகள் வருகிறது. ஏற்கனவே நடந்த சம்பவங்கள், அதனால் உண்டான காயங்கள் போன்றவற்றை திரும்பத் திரும்ப பேசி, ஒருவரை உள்நோக்கத்துடன் காயப்படுத்துவதால், வேறு பிரச்னைக்கு வழிவகுக்கிறது.

எனவே, உறவுகளுக்குள் கடந்த கால கசப்பான சம்பவங்களை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும் என்பதை இருவரும் கருத்தில் கொள்ள வேண்டும். உறவுகளுக்குள் எதிர்பார்ப்புகள் இருப்பது இயல்பு. ஆனால், அந்த எதிர்பார்ப்புகள் ‘என்னிடம் நீங்கள் எந்த அளவிற்கு எதிர்பார்ப்புகளை வைக்கலாம் என்று நான் நினைக்கிறேனோ அந்த அளவிற்கு நான் உங்களிடம் எதிர்பார்ப்புகளை வைத்துக்கொள்ளலாம்’ என்பதாகவே இருத்தல் வேண்டும்.

வாழ்க்கை முறை மற்றும் தொழில்...

தம்பதிகள் இருவரும் வேலைக்குச் செல்வது அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையையும், பொருளாதார சுதந்திரத்தையும் தரும். ஒரு குடும்பத்தை கட்டமைக்கும் முன்பே இருவரும் தங்களுக்கான வேலை அல்லது தொழிலில் தங்களை வலுப்படுத்திக் கொண்டு பொருளாதார சுதந்திரத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைப் பேற்றை திட்டமிடும் போது, குழந்தையின் முதல் இரண்டு ஆண்டுகளுக்காவது யாராவது ஒருவரது கவனம் முழுமையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். இது தொடர்பான முடிவுகளை திருமணத்திற்கு முன்பே பேசித் தெளிவு படுத்திக் கொள்வதும் அவசியம். செலவுகளை பொறுத்த மட்டில் என் பணம்...

உன் பணம் என்று வாதிடாமல் நம்ம குடும்பம்... நம்ம குழந்தை என்று நினைத்தல் வேண்டும். திருமணத்திற்கு முன் இருவருக்கும் இரு வேறுபட்ட வாழ்க்கை முறைகள் இருந்திருக்கும். இருவரும் சேர்ந்து பயணிக்கத் தொடங்கியதும் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்வது கடினம். அதற்கான கட்டாயப்படுத்துதலும் இருத்தல் கூடாது. நண்பர்களுடன் நேரம் செலவிடுவது, தனிப்பட்ட நேரம் மற்றும் விருப்பங்கள் போன்றவற்றை மாற்ற நினைத்தால் அது குடும்ப வாழ்க்கையையும் பாதிக்கலாம். ஒருவரின் பழக்கம் மற்றொருவருக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம்.

பொதுவான ஆலோசனைகள்...

உறவில் இணையும் இருவருமே மன ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். இருவரில் ஒருவருக்கு ஏதாவது கடந்தகால பிரச்னைகள் இருந்தால் தங்களை மனரீதியாக குணப்படுத்திக் கொண்டு புதிய உறவில் இணைவது நல்லது. திருமணமாகிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று முழுமையாக நம்ப முடியாது. யாரையும் எதிலிருந்தும் வெளிக்கொண்டுவர மற்றவருக்கு ஸ்டாமினா இருக்காது. எதுவாக இருந்தாலும் தாங்களே சரிப்படுத்திக்கொண்டு புதுப் பயணத்தை தொடங்குவது நல்லது.

இன்று ஆண்-பெண் இருவராலும் சம்பாதிக்க முடியும், தங்களை பார்த்துக் கொள்ளவும் முடியும். ஒரு குடும்பத்தை அமைப்பதற்காக திருமணம் தேவையாக இல்லாத இந்தக் காலத்திலும் இரண்டு நபர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றால் அது ‘தோழமை’ என்பதற்காக மட்டும்தான். ஒரு உறவில் தோழமை உணர்வு உள்ளதென்றால் அந்த உறவை விட்டுவிடாதீர்கள். ‘உனக்காக நான் இருப்பேன்’ என்று ஒருவருக்கு ஒருவர் தரும் பாதுகாப்பு உணர்வுதான் திருமணத்தின் அடிப்படை.

மனநல ஆலோசகரை அணுகுவது ஏதோ பெரிய மனநோய் என்று நினைக்காமல், ஒரு ஆரோக்கியமான உறவை உருவாக்க உதவும் பாலமாகப் பார்க்க வேண்டும். ‘திருமணம் ஆகிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்’ என்ற நம்பிக்கை யில் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். ஏனெனில் அது பிரச்னைகளை மேலும் சிக்கலாக்குமே தவிர தீர்க்காது.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்