சென்னை: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், பின்லாந்து நாட்டு கல்வி அமைச்சர் அனா மஜா ஹென்ரிக்சன் முன்னிலையில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திறன் மேம்பாட்டு முனைப்புகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், ‘‘தமிழ்நாட்டில் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் இந்தாண்டு 30,200 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு அதிகபட்சமாக 94.5% சேர்க்கை பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார். தமிழ்நாட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் வாயிலாக செயல்படுத்தப்படும் பயிற்சிகளையும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் வழங்கப்படும் பயிற்சிகள் மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் குறித்தும் கூட்டத்தில் அமைச்சர் எடுத்துரைத்தார்.
பின்னர், தமிழ்நாடு மற்றும் பின்லாந்து நாட்டு அமைச்சர்களுக்கு இடையே தமிழ்நாட்டின் மாணவர்களுக்கு பின்லாந்தில் திறன் பயிற்சி மேற்கொள்வதற்கும் பின்லாந்து மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள திறன் பயிற்சிகளை பெறுவதற்கும் வழிவகை செய்யப்படும் என பரஸ்பரமாக தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளர் குமார் ஜயந்த், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையர் சுந்தரவள்ளி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.