Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

கூடங்குளம் அருகே 606 அரிய வகை ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன: வனத்துறை நடவடிக்கை

கூடங்குளம்: அழிந்து வரும் ஆமை இனமான ஆலிவ் ரெட்லி ஆமைகள் ஆண்டுதோறும் ஜனவரி முதல் மார்ச் வரை தமிழக கடற்கரை பகுதிக்கு வந்து முட்டையிட்டு செல்லும். ஆலிவ் ரெட்லி ஆமைகள் சுமார் 150 முதல் 180 முட்டைகள் வரை இடும். ஆமைகள் முட்டையிடும் போது நாய், நரி மற்றும் சமூக விரோதிகளால் முட்டைகள் சேதப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. எனவே கடற்கரை மணல் பரப்பில் ஆமைகள் இடும் முட்டைகளை சேகரித்து வனத்துறைக்கு சொந்தமான ஆமை குஞ்சுகள் பொறிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்து பராமரிக்கப்படுகின்றன.

45 முதல் 55 நாட்கள் வைத்து பாதுகாத்து குஞ்சு பொரித்தவுடன் கடலில் விடப்படுவது வழக்கம். அதன்படி நெல்லை மாவட்ட கடற்கரை கிராமங்களில் வனத்துறையினரும், கடற்கரை கிராம பொதுமக்களும் இணைந்து அரிய வகை கடல் ஆமைகளை பாதுகாத்து வருகின்றனர். இந்தாண்டு 2,552 அரியவகை ஆமை முட்டைகளை கூடங்குளம் அருகே உள்ள அஞ்சல் மற்றும் கூட்டப்பனை கடற்கரை கிராமங்களில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் பராமரித்து பாதுகாத்து வந்தனர். இந்த கடல் ஆமை முட்டைகள் 45 நாட்கள் முதல் 50 நாட்களுக்குள் குஞ்சுகள் பொறித்து வெளியே வருகின்றன.

அவ்வாறு 736 கடல் ஆமை குஞ்சுகள் ஏற்கனவே கடலில் விடப்பட்டு விட்டன. நேற்று கூடங்குளம் அருகேயுள்ள பஞ்சல், கூட்டப்பனை கடற்கரை கிராமங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட கடல் ஆமை முட்டைகளில் இருந்து 606 குஞ்சுகள் கடலில் பாதுகாப்பாக விடப்பட்டன. நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட வன அலுவலர் இளங்கோ, ராதாபுரம் வன சரக அலுவலர் செங்குட்டுவன், வனவர் அப்பனசாமி மற்றும் கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.