Friday, July 11, 2025
Home செய்திகள் கிருஷ்ணகிரியில் 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நாளை துவக்கம்

கிருஷ்ணகிரியில் 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நாளை துவக்கம்

by Lakshmipathi

*பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நாளை(21ம் தேதி) 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி துவங்குகிறது. இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர் தினேஷ்குமார் நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார்.

கிருஷ்ணகிரி -ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரி நகரில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள டோல்கேட் அருகே கலைஞர் திடலில் மாவட்ட மக்கள் மட்டுமின்றி, அண்டைய மாவட்ட மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நாளை(21ம் தேதி) துவங்குகிறது.

தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில், கண்காட்சி அரங்கு, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, காவல்துறை உள்ளிட்ட 32 அரசு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், மா விற்பனை அங்காடிகள், மகளிர் சுய உதவிக்குழு தயாரிப்பு பொருட்கள் விற்பனை அங்காடிகள், ஆவின் பாலகம், கேளிக்கை அரங்குகள் கடைகள் அமைக்கும் பணியும் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இதனிடையே, கண்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகளை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விழா முன்னேற்பாடு பணிகள், அரங்குகள் அமைக்கும் பணிகள், பாதுகாப்பு அம்சங்கள், குடிநீர், மின்சாரம், அரங்கிற்கு உள்ளே செல்லும் நுழைவு வாயில், வெளியே செல்லும் பாதைகள் ஆகியவற்றை அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.

இதுகுறித்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:மாங்கனி கண்காட்சி தினசரி மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். நாள்தோறும் அரசு மற்றும் தனியார் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், கோலாட்டம், பரதநாட்டியம், சாகச விளையாட்டு, மேஜிக் ஷோ, பட்டிமன்றம், நாடகங்கள், கிராமிய பாடல்கள், இன்னிசைக் கச்சேரிகள், நடன, நாடக நிகழ்ச்சிகள், பொழுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

மேலும், அறுசுவை திண்பண்டங்கள் விற்பனை செய்யப்படும். தனியார் அரங்குகளில் வீட்டு உபயோகப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யப்படும். இக்கண்காட்சி திடலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திரைப்பட புகழ், சின்னத்திரை நட்சத்திரங்களின் நகைச்சுவை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.

மேலும், பொதுமக்கள் அரங்குக்குள் செல்லும் நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் வழித்தடங்கள், அரங்குக்கு அருகிலேயே இருசக்கர, நான்கு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கண்காட்சிக்கு வந்து செல்ல அரசு பஸ்கள், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து சின்னஏரி வழியாக பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சாலை மார்க்கமாக கண்காட்சி திடலுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

டவுகள் பஸ்கள் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து மாங்கனி திடல் வரை, சுழற்சி முறையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்கள், சின்னஏரி வழியாக, பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சாலையில் வந்து தர்கா அருகில் உள்ள திடலுக்கு வரவேண்டும்.

மாங்கனி திடலில் இருந்து வெளியே செல்பவர்கள் டோல்கேட் அருகில் உள்ள நாகாஸ் இன் ஓட்டல் எதிரே உள்ள சர்வீஸ் சாலையில், போக்குவரத்து பணிமனை வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

ஆய்வின் போது, எஸ்பி தங்கதுரை, இணை இயக்குநர்கள் பச்சையப்பன்(வேளாண்மைத்துறை), இந்திரா(தோட்டக்லைத்துறை), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன், டிஎஸ்பி முரளி, தாசில்தார் சின்னசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபிரகாசம், உதவி வேளாண் அலுவலர் அருள்தாஸ் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi