Tuesday, July 15, 2025
Home செய்திகள் கோயம்பேடு சாலை விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்திய விவகாரம் ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு விதித்த சிறை தண்டனை நிறுத்திவைப்பு: மேல்முறையீடு வழக்கில் உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு

கோயம்பேடு சாலை விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்திய விவகாரம் ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு விதித்த சிறை தண்டனை நிறுத்திவைப்பு: மேல்முறையீடு வழக்கில் உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு

by Karthik Yash

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் சாலை விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட 6.5 சென்ட் நிலத்தை உரிய காரணத்திற்கு பயன்படுத்தாததால் அதை திருப்பித் தரக்கோரி அளித்த மனுவை பரிசீலிக்க வேண்டும் என்று நில உரிமையாளர்கள் லலிதாம்பாள் மற்றும் விஸ்வநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர்களை நேரில் அழைத்து விசாரித்து, 2 மாதங்களில் சட்டப்படி தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு 2023ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி சென்னை பெருநகர வளர்ச்சி குழும அப்போதைய உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அப்போதைய உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து அன்சுல் மிஸ்ரா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டு, 25,000 ரூபாயை அன்சுல் மிஸ்ரா மூன்று வாரங்களில் டெபாசிட் செய்யுமாறு உத்தரவிட்டனர். மேலும், மேல்முறையீட்டு மனு குறித்து பதிலளிக்குமாறு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi