அண்ணாநகர்: கோயம்பேடு உள்வட்ட சாலையில் ரூ.8.63 கோடியில் அமைக்கப்படும் நவீன வசதியுடன் கூடிய இயற்கை எழில் கொஞ்சும் பசுமை பூங்கா, மே இறுதிக்குள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்பேடு உள்வட்ட சாலை பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் சுமார் 3.59 ஏக்கர் பரப்பளவில் ரூ.8.63 கோடி மதிப்பீட்டில் யோகா மையம், நடைபயிற்சி பாதை, ஜிம் உள்ளிட்ட வசதிகளுடன் இயற்கை எழில் கொஞ்சும் பசுமை பூங்கா அமைக்கும் பணியில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஈடுபட்டு வருகிறது.
இந்த பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால், மே மாதம் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பிரமாண்டமாக பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் பூங்கா கட்டப்பட்டு வருவது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. இது எப்போது பயன்பாட்டிற்கு திறக்கப்படும், என ஆவலோடு காத்திருக்கிறோம்,’ என்றனர்.