அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் சட்டம், ஒழுங்கு குற்றப்பிரிவு, அனைத்து மகளிர் போக்குவரத்து, உளவுப்பிரிவு ஆகிய காவல் நிலையங்கள் இயங்கி வருகிறது. இங்கு அடிக்கடி மின்சாரம் தடைபடுவதால் காவலர்கள் தங்கள் பணியை செய்ய முடியமால் சிரமப்பட்டு வருகின்றனர். புகார் கொடுக்க வருகின்ற பொதுமக்களும் சிரமப்படுகின்றனர்.
இந்த நிலையில், நேற்றிரவு முழுவதும் மின்சாரம் இல்லாததால் காவலர்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து மின்சார அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் சீரமைக்கவில்லை என்று தெரிகிறது. இதன்காரணமாக அலுவலக பணிகள் அனைத்தும் கிடப்பில் உள்ளது.
இதுகுறித்து காவலர்கள் கூறுகையில், ‘’கோயம்பேடு காவல் நிலையத்தில் மட்டும் அடிக்கடி மின்சாரம் இல்லாமல் போய்விடுகிறது. தற்போது வெயில் தொடங்கிவிட்டதால் மின்சாரம் இல்லாமல் மிகவும் கஷ்டமாக உள்ளது. அலுவலக பணிகள் கிடப்பில் உள்ளது. கழிப்பறைக்கு செல்வதற்குகூட தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே, உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் செயல்பட்டு மின்சாரம் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.