Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கோவளம் முகத்துவாரத்தில் ரூ.471 கோடியில் புதிய நீர்த்தேக்கம்: 4,375 ஏக்கர் நிலப்பரப்பில் அமைகிறது

சென்னை: ஓ.எம்.ஆர். சாலையில் சுமார் 10 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகி உள்ளன. இதுமட்டுமின்றி 80க்கும் மேற்பட்ட தனியார் மென்பொருள் நிறுவனங்கள், 3 மருத்துவக் கல்லூரிகள், 17 பொறியியல் கல்லூரிகள், 5 கலைக்கல்லூரிகள், 100க்கும் மேற்பட்ட தனியர் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இங்கு ஏராளமான வீட்டு மனைப்பிரிவுகள், தனி வீடுகளின் விற்பனை அதிகமாகிக் கொண்டே வருகிறது. இவர்களுக்கு தேவையான குடிநீர் திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள இள்ளலூர், வெண்பேடு, காயார், தண்டலம், திருப்போரூர், செம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 1000க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலம் சென்னை புறநகர் பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ச்சியாக வளர்ச்சி அடைந்து வரும் இப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகவே, சென்னையை ஒட்டி புதிய நீர்த்தேக்கம் ஒன்றை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்து சட்டமன்றத்தில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. வருகிற 2035ம் ஆண்டுக்குள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 35 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும் என நீர்வளத்துறை கணக்கிட்டுள்ளது. ஆகவே சிறிய நீர்த்தேக்கங்களை அமைத்து நீரை தேக்கி வைத்து பயன்படுத்தலாம். அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து தனியார் வீடுகளில் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் எப்போதும் தண்ணீர் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி முட்டுக்காடு முகத்துவாரம் உள்ளது. இதையொட்டி கோவளம், கேளம்பாக்கம் பகுதிகள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 5000 ஏக்கர் உப்பள நிலம் உள்ளது. இவற்றை முறையாக பயன்படுத்தினால் நீர்த்தேக்கம் ஒன்றை அமைக்கலாம் என பொதுப்பணித் துறை மற்றும் நீர்வளத்துறை அறிக்கை அளித்திருந்தது. இதையடுத்து இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வந்து அதற்காக சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் மூலம் கோவளம் பகுதியில் நீர்த்தேக்கம் அமைக்க முடியும் என்றும், இதற்கு தனியார் நிலங்களை கையகப்படுத்த வேண்டிய நிைல ஏற்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் உப்பு நிறுவனத்திற்கு சொந்தமான 4375 ஏக்கர் நிலத்தை இத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு துறை மாற்றம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலத்தில் ரூ.471 கோடி மதிப்பில் கேளம்பாக்கம், கோவளம், முட்டுக்காடு ஆகிய மூன்று கிராமங்களை ஒன்றிணைத்து முட்டுக்காடு முகத்துவாரத்தை ஒட்டி நீர்த்தேக்கத்தை அமைக்க தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு புதிய நீர்த்தேக்கத்திற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

நெம்மேலி குடிநீர் திட்டம் அடுத்த ஆண்டு நிறைவுறும்

சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கடந்த 2006ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தென்சென்னை பகுதிகளில் நிலவி வந்த குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை சரி செய்யப்பட்டது. தற்போது நெம்மேலி பகுதியில் இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் 6038 கோடி ரூபாய் செலவில் இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் குடிநீர் ஆலை அமைக்கும் பணிகள், கடலுக்குள் குழாய்கள் அமைக்கும் பணிகள் முடிவுற்று விட்டன. தற்போது இங்கு சுத்திகரிக்கப்படும் குடிநீரை குழாய்கள் மூலம் போரூர் ஏரி வரை கொண்டு செல்லும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நெம்மேலியில் இருந்து திருப்போரூர், கேளம்பாக்கம், வண்டலூர் வழியாக போரூர் வரை ராட்சத குழாய்கள் புதைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இத்திட்டப்பணிகள் அடுத்த ஆண்டு நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2035ம் ஆண்டு வரை சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.