கொடைக்கானல்: கொடைக்கானலில் மே 26ம் தேதி 60வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா துவங்கியது. இதில் 34 வகையான ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான பல வண்ண மலர்கள் இடம் பெற்றுள்ளன. கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. விடுமுறை தினமான நேற்று மலர் கண்காட்சியை காண பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று, நேற்றுடன் நிறைவடைய இருந்த மலர் கண்காட்சியை நாளை (மே 30) வரை 2 நாள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் கோடை விழா பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகளுடன் வரும் ஜூன் 2ம் தேதி வரை நடக்கிறது. மலர் கண்காட்சி, கோடை நிகழ்ச்சிகளை காண கடந்த 3 நாட்களில் சுமார் 40 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளனர். இவர்களிடமிருந்து கட்டணமாகரூ.10 லட்சத்து 50 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது.