Monday, July 14, 2025
Home மருத்துவம்ஆரோக்கிய வாழ்வு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை! ஒரு சாதனை

சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை! ஒரு சாதனை

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

தமிழ்நாடு அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்குகிறது. அந்த வகையில் மருத்துவத் துறையில் முதலிடத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைத் துறையில் ஒரு புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் உள்ள FIMS மருத்துவமனையில், 44 வயதான திரு. விவேக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு, iORTA குழுவின் வழிகாட்டுதலால், மிகக் குறுகிய காலத்திலேயே சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. இது வெறும் ஒரு மருத்துவச் சாதனையாக அல்லாமல், அறிவியல், தொழில்நுட்பம், மனித இரக்கம் ஆகியவை ஒன்றிணையும் ஒரு சங்கமாகவும், இந்திய மருத்துவ வரலாற்றில் ஒரு மைல்கல்லாகவும் அமைந்துள்ளது என்று நம்மிடம் பேசத்துவங்கினார் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் பிரபு காஞ்சி.

திரு. விவேக் 2023 ஆம் ஆண்டு அக்டோபரிலிருந்து 5ஆம் நிலை நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, தொடர்ச்சியான டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்தார். அவரது நிலைமை தீவிரமாவதற்குள், ஏப்ரல் 25, 2025 அன்று தமிழக அரசு உறுப்பு மாற்று பட்டியலில் பெயர் பதிவு செய்யப்பட்டு, வெறும் 9 நாட்களில் பொருத்தமான நன்கொடையாளர் உறுப்பு கிடைத்தது. இவ்வளவு குறுகிய காத்திருப்பு நேரத்தில் சிகிச்சை நடைபெறுவது தமிழகத்தில் இதுவரை இல்லாத ஒரு சாதனை. மே 4, 2025 அன்று அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று, அவருடைய வாழ்க்கைக்கு புதிய வாய்ப்பு கிடைத்தது.

இது வழக்கமான அறுவைசிகிச்சையாக இல்லாமல், அறிவியல் நம்பிக்கையின் வெளிப்பாடாக அமைந்தது. மூளைச்சாவு அடைந்த நன்கொடையாளர் ஒருவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும்போது, அவரது சிறுநீரகத்தின் கிரியேட்டினின் அளவு 1.8 mg/dL இலிருந்து 7.0 mg/dL ஆக உயர்ந்தது. இதன் அடிப்படையில், தமிழ்நாட்டின் பல முன்னணி மருத்துவ மையங்கள் அந்த உறுப்பை நிராகரித்தன.

ஆனால் iORTA குழு இந்த உறுப்பை ஒரு நோயாளிக்கு வாழ்க்கை தரக்கூடியதாக மாற்றும் எண்ணத்துடன், பின்வரும் மூன்றுபட்ட உயர்தர அறிவியல் பரிசோதனைகளை மேற்கொண்டது: விர்ச்சுவல் கிராஸ்மேட்ச் (Virtual Crossmatch), உறைந்த பிரிவு பயாப்ஸி (Frozen Section Biopsy) மற்றும் இயந்திர பெர்ஃப்யூஷன் சோதனை (Machine Perfusion Testing). இம்மூன்று பரிசோதனைகளும் உறுப்பின் செயல்திறனை உறுதிப்படுத்தின.

இதனால், பயன்பாடற்றதாக கருதப்பட்ட உறுப்பு, ஒருவரின் உயிரை காக்கும் அரிய வாய்ப்பாக மாறியது.அறுவைசிகிச்சை முறையில் கூட, iORTA குழு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தியது. இரட்டை அறுவை கீறல்களின் அவசியம் இல்லாமல், ஒரு பக்கத்தில் இரு சிறுநீரகங்களையும் ஒற்றை அலகாக மாற்றும் நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதனால் நோயாளியின் உடல் மீட்பு வேகம் அதிகரிக்கப்பட்டது மற்றும் அறுவைசிகிச்சை பின்விளைவுகள் குறைக்கப்பட்டன. சுமார் 10 மணிநேர குளிர் மற்றும் 2.30 மணிநேர வெப்ப நிலையில் உறுப்பு பராமரிக்கப்பட்டபோதும், சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது என்பது, குழுவின் திட்டமிடல் மற்றும் துல்லியமான செயலாக்கத்தின் வெற்றியை உணர்த்துகிறது.

மேலும் பேசிய அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் பிரபு காஞ்சி, “மற்ற மையங்கள் மறுத்தபோதும் நாங்கள் அறிவியலை நம்பினோம். நவீன தொழில்நுட்பம், குழு ஒருமைப்பாடு மற்றும் துணிச்சலான முடிவுகள் மூலம், ஒரு நிராகரிக்கப்பட்ட உறுப்பை புதிய வாழ்வில் இணைத்தோம்,” என்றார். நோயாளி தற்போது நல்ல முறையில் குணமடைந்து வருகிறார். அவரது நிலைமை தொடக்கத்திலிருந்தே ஊக்கமளிக்கும் வகையில் இருந்தது. அவருடைய உடலில் உறுப்பின் ஒத்திசைவு மற்றும் செயல்பாடு மிகச் சரியாக நடைபெறுகிறது.

இந்தச் சாதனை, தமிழ்நாட்டின் உறுப்பு தான மற்றும் மாற்று சிகிச்சை அமைப்பின் திறனை பிரதிபலிப்பதோடு, iORTA அமைப்பின் எதிர்கால நோக்கையும் வலியுறுத்துகிறது. அவர்கள் உறுப்புகளோடு வாழ்க்கையும் வழங்குகிறார்கள். மருத்துவ சமத்துவம், நேர்மையான அணுகல், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் மனித உணர்வுகளின் ஒருங்கிணைவு இங்கே பூரணமாக அடையப்பட்டுள்ளது.

iORTA குழு, இந்தியாவிலும் உலகளாவிய அளவிலும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் தர நிர்ணயத்தை மேலே உயர்த்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு, மருத்துவ உலகிற்கு ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது ஒரு நோயாளியின் வாழ்க்கையை மாற்றியதோடு, எதிர்காலத்தில் ஏனைய சிகிச்சை மையங்களுக்கு ஒரு உந்துதலாகவும் இருக்கும். இது போன்ற சிகிச்சைகள், நம் நாட்டின் மருத்துவ வளர்ச்சியைச் சுட்டிக்காட்டும் ஒளிக்கதிராக திகழும். சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு தமிழ்நாட்டில் அரசு சார்பில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சில மருத்துவமனைகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையையும் செய்து உள்ளோம் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

தொகுப்பு: சுரேந்திரன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi