புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசியலமைப்பு சட்டப்பிரிவு 93, மக்களவையின் சபாநாயகர், துணை சபாநாயகர் இருவரையும் தேர்ந்தெடுப்பதை கட்டாயமாக்குகிறது. சபாநாயகருக்குப் பிறகு துணை சபாநாயகர் மக்களவையின் 2வது மிக உயர்ந்த தலைவர் ஆவார். ஆனால், சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக கடந்த 2 மக்களவைகளில் இப்பதவியில் யாரும் நியமிக்கப்படவில்லை. 17வது மக்களவையில் துணை சபாநாயகர் பதவி காலியாக இருந்தது. தற்போதைய 18வது மக்களவையிலும் இது தொடர்கிறது.
இது ஜனநாயக அரசியலுக்கு நல்லதல்ல. அரசியலமைப்பு விதிகளையும் மீறுவதாகும். எனவே, அவையின் மதிப்புமிக்க மரபுகள் மற்றும் நாடாளுமன்றத்தின் ஜனநாயக நெறிமுறைகளுக்கு ஏற்ப, மக்களவை துணை சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் செயல்முறையை இனியும் தாமதமின்றி தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறி உள்ளார். அடுத்த மாதம் 21ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.