லண்டன்: லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று திடீரென திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் நிஜ்ஜார் படுகொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்த நாட்டு அரசு கூறியதால் இந்தியா, கனடா இடையே பிரச்னை உருவாகி உள்ளது. இந்த நிலையில் லண்டனில் கடந்த ஜுன் மாதம் காலிஸ்தான் ஆதரவாளர் அவதார்சிங் கந்தா என்பவர் மர்ம முறையில் இறந்தார். அவர் விஷம் வைத்து ெகால்லப்பட்டதாக புகார் எழுந்தது. ஆனால் பிரேதபரிசோதனை அறிக்கையில் அவதார்சிங் கந்தா மரணத்திற்கான அதிகாரப்பூர்வ காரணம் கடுமையான ரத்த புற்றுநோய் என்று கூறப்பட்டு இருந்தது.
இருப்பினும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இதுதொடர்பாக லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இப்போது கனடா நிஜ்ஜார் கொலையில் பிரச்னை எழுந்துள்ளதாலும், இந்தியா மீது குற்றம் சாட்டப்பட்டு இருப்பதாலும், அவதார்சிங் கந்தா மரணம் தொடர்பாகவும் லண்டன் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டு நேற்று லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் திடீரென திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அபபோது, இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். அதை தொடர்ந்து லண்டனில் உள்ள சீக்கிய கூட்டமைப்பு சார்பில் அவதார்சிங் கந்தா மரணம் தொடர்பாக இங்கிலாந்து மற்றும் வேல்சின் தலைமை விசாரணை அதிகாரி விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.