Tuesday, June 17, 2025
Home செய்திகள்Showinpage தொடர் கனமழையால் தத்தளிக்கும் கேரளா; ஒரே நாளில் 10 பேர் பலி: மாயமான 4 பேரின் கதி என்ன?

தொடர் கனமழையால் தத்தளிக்கும் கேரளா; ஒரே நாளில் 10 பேர் பலி: மாயமான 4 பேரின் கதி என்ன?

by Neethimaan

* ரயில் போக்குவரத்து 3வது நாளாக பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் அதிகமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மழைக்கு 10 பேர் பலியானார்கள். 4 பேரை காணவில்லை. ரயில் போக்குவரத்து 3வது நாளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வழக்கமாக ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த வருடம் 8 நாட்களுக்கு முன்னதாகவே பருவமழை தொடங்கிவிட்டது. தொடக்கத்திலேயே கேரளா முழுவதும் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து மிக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மழை தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு உள்பட அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மழையுடன் பலத்த காற்றும் வீசி வருவதால் கேரளா முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்களும், மின் கம்பங்களும் முறிந்துள்ளன. அவை தண்டவாளங்களில் விழுந்ததால் கடந்த 3 நாட்களாக கேரளாவில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் குருவாயூர்-சென்னை, மைசூரு-திருவனந்தபுரம், கோரக்பூர்-திருவனந்தபுரம் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் உள்பட பல ரயில்கள் தாமதமாக ஓடின. இதனால் ரயில் பயணிகள் பாதிப்படைந்துள்ளனர். 18 ஆயிரத்திற்கும் அதிகமான மின்கம்பங்கள் சாய்ந்ததின் காரணமாக கேரள மின்வாரியத்திற்கு ரூ.180 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்மழை காரணமாக ஆலப்புழா, எர்ணாகுளம், மலப்புரம், கண்ணூர் உள்பட பெரும்பாலான பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நேற்று பெய்த கனமழையால் 10 பேர் பலியானார்கள். 4 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன என்பது குறித்து தெரியவில்லை. காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது. இன்று 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இன்றும் காலை முதலே கேரளா முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம் ஆயுதப்படை முகாமில் இன்று அதிகாலை மரம் விழுந்ததில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் காயமடைந்தனர். கேரளா முழுவதும் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi