Monday, May 29, 2023
Home » ஆளுநர்களின் நடவடிக்கைக்கு எதிரான கூட்டு நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல்வரின் கடிதத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வரவேற்பு..!

ஆளுநர்களின் நடவடிக்கைக்கு எதிரான கூட்டு நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல்வரின் கடிதத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வரவேற்பு..!

by Neethimaan

ஆளுநர்களின் நடவடிக்கைக்கு எதிரான கூட்டு நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல்வரின் கடிதத்திற்கு கேரள முதல்வர் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் எழுதியுள்ள கடிதத்தில்; கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், 11-4-2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களைத் தாம் முழுமையாக ஆதரிப்பதாகவும், அவை கேரளத்தில் நாங்கள் எடுத்த நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் அவர்கள் காலதாமதம் செய்வது குறித்து பொதுமக்கள் ஜனநாயக முறையில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தபோது, கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த ஆதரவைத் தாம் நினைவுகூர்வதாக கேரள முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருப்பதைப் போல, தற்போது பல மாநிலங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இதுபோன்ற பிரச்சினையை எதிர்கொள்வதாகவும், கேரளாவிலும், மாநில சட்டப்பேரவையில் உரிய விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட சில சட்டமுன்வடிவுகள் ஆளுநரால் நீண்ட காலமாகவும், அவற்றில் சில ஓராண்டிற்கு மேலாகவும் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள மாண்புமிகு கேரள மாநில முதலமைச்சர் அவர்கள், கேரள மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று, கேரள ஆளுநர் கேட்ட விளக்கங்களை அளித்தும் சட்டமுன்வடிவுகள் இவ்வாறு நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். வாக்களித்த மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் மாநிலச் சட்டமன்றங்கள் நிறைவேற்றும் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல், அவற்றை நீண்டகாலம் நிலுவையில் வைப்பது என்பது, மக்களின் ஜனநாயக உரிமைகளை நிராகரிப்பதற்குச் சமமானது என்று கேரள முதலமைச்சர் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில், காலதாமதம் செய்வதன் வாயிலாக, மாநில அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற நாடாளுமன்ற ஜனநாயக மரபு மீறப்படுகிறது என்றும், அரசியலமைப்பில் ஆளுநருக்கு வரையறுக்கப்பட்டுள்ள விருப்புரிமை, குறுகிய வரம்புகளுக்குள் செயல்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர், அரசியலமைப்பை உருவாக்கிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரால் ஒப்புக்கொள்ளப்பட்டபடி, 356-வது பிரிவைப் பயன்படுத்துவதும் ஒரு காலாவதியான கடிதமாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளதைத் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். சட்டமன்றங்களில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ள மாநில அரசுகளை அகற்றுவதற்கு சட்டப்பிரிவு 356 மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள கேரள முதலமைச்சர், அதற்கு எடுத்துக்காட்டுகளாக 1959-ல் கேரளாவில் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசும், 1976 மற்றும் 1991-ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மு.கருணாநிதி அவர்களது தலைமையிலான தி.மு.க. அரசும் கலைக்கப்பட்ட நிகழ்வுகளைத் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் செயல்பாடுகளுக்குத் தடை ஏற்படுத்துவதைத் தடுத்து நிறுத்திட மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் நமது அரசியலமைப்பில் உள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் பாதுகாவலர்கள் என்ற முறையில் நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான கால அவகாசம் அரசியலமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அது நியாயமானதாக இருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள கேரள முதலமைச்சர், பல மாநிலங்களின் அனுபவத்தின் அடிப்படையில், அரசியலமைப்பின் செயல்பாட்டை மறுஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி எம்.என்.வெங்கடாசலய்யா ஆணையமும், ஒன்றிய-மாநில உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி எம்.எம்.புஞ்சி ஆணையமும், சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய காலவரம்பைப் பிரிவு 200-ல் குறிப்பிடப் பரிந்துரைத்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ள பிரச்சினையில், தாங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், இந்த முன்மொழிவை மிகவும் தீவிரமாகப் பரிசீலிப்பதாகவும் கேரள முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi