திருவனந்தபுரம்: கேரள சட்டம், ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஷேக் தர்வேஷ் சாகிப் நேற்று ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து புதிய டிஜிபியை தேர்வு செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதன்படி நிதின் அகர்வால், ரவடா சந்திரசேகர், யோகேஷ் குப்தா உள்பட 5 பேர் அடங்கிய பட்டியலை கேரள அரசு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தது. இதில் முதல் 3 பேரில் ஒருவரை தேர்வு செய்ய ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. இது தொடர்பாக நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் டெல்லியில் ஐபி சிறப்பு இயக்குனராக உள்ள ரவடா சந்திரசேகரை புதிய சட்டம், ஒழுங்கு டிஜிபியாக நியமிக்க தீர்மானிக்கப்பட்டது. 1991ம் ஆண்டு கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரியான ரவடா சந்திரசேகர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். ரவடா சந்திரசேகர் கடந்த 2008ம் ஆண்டு டிஐஜியாக இருந்த போது ஒன்றிய அரசுப் பணிக்கு சென்றார். இதன் பிறகு இவர் கேரள அரசுப் பணிக்குத் திரும்பவில்லை. 17 வருடங்களுக்குப் பின்னர் தற்போது தான் இவர் டிஜிபியாக கேரள அரசுப் பணிக்கு திரும்புகிறார்.
Advertisement
