கேரளா: தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரள மாநிலங்களில் கனமழை பொழிந்து வருகிறது. கேரளாவில் தொடர் கனமழை 11 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கர்நாடகாவிலும் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களின் பல பகுதிகள் மிக கனமழையால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்டங்களுக்கு திங்கள் (மே 26) மற்றும் செவ்வாய் (மே 27) ஆகிய தேதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். அதே நேரத்தில் பல்கலைக்கழக தேர்வுகள் மற்றும் கேரள பொது சேவை ஆணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் போன்ற முன்னதாக திட்டமிடப்பட்ட தேர்வுகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை காரணமாக பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணூர் பல்கலைக்கழகமும் திங்கட்கிழமை திட்டமிடப்பட்ட அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைத்துள்ளது. கேரள அரசு பிறப்பித்த அறிவுறுத்தல்களின்படி, அதிக மழை பெய்யும் மலைப்பகுதிள், நிலச்சரிவு மற்றும் மலை வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளது.