கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் ரூ.3 லட்சம் நிவாரணம்
சென்னை: பாலக்காடு அருகே கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த துப்புரவுப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி மற்றும் ஆறுதல்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
கேரளா மாநிலம், பாலக்காடு, ஷோரனூர், பாரதப்புழா பாலம் அருகில் நேற்று (02.11.2024 பிற்பகல் கேரளா எக்ஸ்பிரஸ் இரயில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் இரயில் பாதையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த சேலம் மாவட்டம் மற்றும் வட்டம், ஆச்சாங்குட்டப்பட்டி, அடிமலை புதூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 55) த/பெ.அண்ணாமலை, வள்ளி (வயது 45) க/பெ.லட்சுமணன், காரைக்காடு, டி.பெருமாள் பாளையத்தைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 45) த/பெ.ராமசாமி, மற்றும் அல்லிக்குட்டையைச் சேர்ந்த ராஜம்மாள் (வயது 43) த/பெ.வீரன் ஆகிய நால்வரும் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.


