ஜம்மு: காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச துணை முதல்வர் சுரீந்தர் சவுத்ரி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்திருந்தார். இதற்கான சிறப்பு அமர்வு நேற்று நடந்தது. தீவிரவாத தாக்குதலில் பலியான 26 பேருக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு சிறப்பு அமர்வு தொடங்கியது.
இதில், தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் அதன் குடிமக்கள் அனைவருக்கும் அமைதி, வளர்ச்சி, செழிப்புக்கான சூழலை மேம்படுத்துவதற்கும், மத நல்லிணக்கத்தையும், வளர்ச்சியையும் சீர்குலைக்க விரும்புவோரின் மோசமான திட்டங்களை தோற்கடிப்பதற்கு உறுதி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும், குறிப்பாக ஊடகங்கள், உணர்ச்சிகளை தூண்டும் தீய சக்திகளுக்கு பலியாகாமல் பொறுப்பாக நடந்து கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தீர்மானத்தின் மீதான விவாதத்தின் முடிவில் பேசிய மாநில சுற்றுலா துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் உமர் அப்துல்லா, ‘‘கோழைத்தனமான பஹல்காம் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். காஷ்மீர் வந்த சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்யும் பொறுப்பில் இருந்து நான் தவறி விட்டேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒன்றிய அரசிடம் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கேட்க மாட்டேன். எனது அரசியல் அவ்வளவு தரம் தாழ்ந்து விடவில்லை’’ என்றார்.