குப்வாரா: ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் செவ்வாயன்று போதைப்பொருள் வழக்கு தொடர்பாக ராணுவ வீரர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராணுவ வீரர்கள் காவல்நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர். அங்குள்ள காவலர்களை தாக்கியுள்ளனர். 3 லெப்டினன்ட் கர்னல் தலைமையிலான வீரர்கள் ரைபிளின் அடிபாகம், கம்புகள் வைத்து போலீசாரை தாக்கியதுடன் எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகின்றது.
காயமடைந்த போலீஸ் அதிகாரிகளிடம் இருந்த போனை பறித்துக்கொண்ட அவர்கள், அங்கிருந்து தப்பிச்செல்வதற்கு முன் காவலர் ஒருவரை கடத்தியும் சென்றுள்ளனர். இந்நிலையில் போலீசாரை கொலை செய்ய முயற்சித்ததாக குப்வாரா காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 லெப்டினன்ட் கர்னல் உட்பட 16 ராணுவத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.