Wednesday, May 14, 2025
Home செய்திகள்Showinpage கரூர் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது

கரூர் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது

by Suresh

கரூர்: கரூர் அருகே குளித்தலை கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் ஷியாம் சுந்தர்(17). இவர் பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார். தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இந்நிலையில் குளித்தலை மகா மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. இதில் கொல்லம் பட்டறை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மாரியம்மனுக்கு பூக்களை எடுத்துக்கொண்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர்.

இரவு 11.30 மணி அளவில் பேரளாம்மன் கோவில் தெருவில் வந்தபோது ஷியாம் சுந்தர் உள்ளிட்ட சிறுவர்கள் நடனமாடிக்கொண்டிருந்தனர். அப்போது அருகே நடனமாடியபடி வந்த குளித்தலை பெரிய பாலத்தை சேர்ந்த நாகேந்திரன் மற்றும் சிலர், ஷியாம் சுந்தர் மீது விழுந்தனர்.

இதனால் கோபமடைந்த அவர், நாகேந்திரனை சற்று தள்ளி நடனம் ஆடுமாறு கூறியுள்ளார். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் நாகேந்திரன் தான் வைத்திருந்த கத்தியால் ஷியாம் சுந்தரை குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதை தடுக்க வந்த குளித்தலையை சேர்ந்த ஜலந்தர் மகன் தாமோதரன்(25), ராஜேந்திரன் மகன் வசந்தகுமாருக்கும்(23) கத்திக்குத்து விழுந்தது. அதனால் திருவிழாவில் பரபரப்பு, பதற்றம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். கத்திக்குத்தில் பலியான ஷியாம் சுந்தரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், படுகாயம் அடைந்த தாமோதரனை குளித்தலை அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். லேசான காயங்களுடன் வசந்தகுமார் முதலுதவி பெற்று வீடு திரும்பினார்.

கொலை சம்பவம் தொடர்பாக 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகேந்திரன் (20), யோகேஷ் (20), முஸ்தபா (19), ராம்குமார் (21) ஆகியோர் கைதான நிலையில், தலைமறைவாக உள்ள மோகன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi