கரூர்: கரூரில் மாணவி கூட்டுபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்து அறுக்கப்பட்டதாக சில செய்தி தொலைக்காட்சிகளில் தவறான தகவல் வெளியிட்டதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு;
23.02.2025 ஆம் தேதி இரவு கடவூர் தாலுகா பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவி இரவு 8 மணிக்கு வீட்டில் இருந்த போது மாணவியின் உறவினரான அதே ஊரைச் சேர்ந்த 17 வயது மாணவன் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வெளியே வரவழைத்து கத்தியால் கழுத்துப் பகுதியில் குத்தி கொடுங்காயம் ஏற்படுத்தியுள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த ஒரு பவுன் செயினையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
இது குறித்து விசாரணையில் மேற்படி மாணவி அந்த மாணவனைப்பற்றி இழிவாக பேசியதாக கோபம் கொண்டு இந்த செயலை அந்த மாணவன் செய்துள்ளதாக தெரிகிறது. மேற்படி மாணவன் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார். இந்நிலையில் மேற்படி செய்தியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கத்தியால் குத்தியதாக சில செய்தி சேனல்களில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனவே உண்மைக்கு புறம்பான தகவல்களை செய்தியாக வெளியிட வேண்டாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.