Wednesday, November 29, 2023
Home » கார்த்திகை தீபத்திருவிழா..தி.மலையில் 64 அடி உயரம் கொண்ட தங்ககொடி மரத்தில் கொடியேற்றம்; திரளான பக்தர்கள் தரிசனம்!!

கார்த்திகை தீபத்திருவிழா..தி.மலையில் 64 அடி உயரம் கொண்ட தங்ககொடி மரத்தில் கொடியேற்றம்; திரளான பக்தர்கள் தரிசனம்!!

by Porselvi

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 5.45 மணி அளவில் சிறப்பு பூஜைகளுடன் அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது, அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி காட்சியளித்தனர். அதைத்தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் கண்ணாடி விமானங்களில் மாடவீதியில் பவனியும், இரவில் நந்தி வாகனத்தில் சுவாமி பவனியும் நடைபெறும். விழாவின் தொடர்ச்சியாக, நாளை மறுதினம் (18ம் தேதி) காலை தங்க சூரிய பிறை வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் இந்திர விமானங்களில் பஞ்சமூர்த்திகளும் பவனி வருகின்றனர்.

வரும் 19ம் தேதி காலை நாக வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் சிம்ம வாகனம், வெள்ளி அன்ன வாகனங்களில் பஞ்சமூர்த்திகளும் பவனி வருகின்றனர். 20ம் தேதி காலை நாக வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் அண்ணாமலையாரும் பவனி வருகின்றனர். வரும் 21ம் தேதி காலை கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் பெரிய ரிஷப வாகனத்தில் அண்ணாமலையாரும் பவனி வருகின்றனர். அதைத்தொடர்ந்து, 22ம் தேதி காலை உற்வசத்தில் வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் வெள்ளி தேரோட்டமும் நடைபெறும்.விழாவின் 7ம் நாளான வரும் 23ம் தேதியன்று மகா தேரோட்டம் நடைபெறும். நிறைவாக, வரும் 26ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் ஏகன் அநேகன் எனும் தத்துவத்தை உலகுக்கு உணர்த்துவதற்காக, பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய், ஆயிரம் மீட்டர் திரி பயன்படுத்தப்படுகிறது. மகா தீபத்தை தரிசிக்க சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?