Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கர்நாடக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட 18 பாஜ எம்எல்ஏக்கள் 6 மாதம் சஸ்பெண்ட்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் சபாநாயகர் மீது காகிதங்களை வீசி எறிந்த பாஜவை சேர்ந்த 18 உறுப்பினர்களை 6 மாதம் சபாநாயகர் யு.டி. காதர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்களை, அவை காவலர்கள் குண்டு கட்டாக தூக்கி சென்று வெளியேற்றியதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் சித்தராமையா உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக், ‘‘அமைச்சர் ராஜண்ணாவை சிக்கவைக்க ஹனிடிராப் நடந்துள்ளது.

நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் அல்லது இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்போது பேசிய, சபாநாயகர் யுடி காதர், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் உயர் மட்ட விசாரணை குழு அமைப்பதாக அறிவித்துள்ளார். எனவே, எதிர்க்கட்சிகள் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாலும் அதை ஏற்காத பாஜவினர் அமளி துமளியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே பேரவை சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு பாஜ உறுப்பினர்கள் மசோதா உள்ளிட்ட காகிதங்களை கிழித்து சபாநாயகர் யுடி காதர் மீதும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மீதும் வீசி எறிந்து அவை நடவடிக்கைகளை தடுத்தனர். இதைத்தொடர்ந்து சபாநாயகர் யுடி காதர் சபையில் வாக்கெடுப்பு நடத்தி மேற்கண்ட 18 உறுப்பினர்களை 6 மாதம் சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தார்.

சபாநாயகர் உத்தரவை தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒவ்வொரு உறுப்பினர்களையும் தேடிச்சென்று அவைகாவலர்கள் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றியதால் பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.