மைசூர்: காவிரி விவகாரத்தில் பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை அரசியல் செய்வதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை தமிழக அரசு நாடியது. இதனை தொடர்ந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி நீர் தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை பின்பற்றாத கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு இடைக்கால மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரித்ததோடு, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின் படி தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.
இருப்பினும் தண்ணீர் தர முடியாது என கர்நாடக அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. இந்நிலையில், காவிரி விவகாரத்தில் பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை அரசியல் செய்வதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். வெறும் அரசியலுக்காகவே பாஜக காவேரி விவகாரத்தை பற்றி பேசி வருவாதாகவும், கர்நாடக மக்களுக்காக அல்ல எனவும் கூறினார். மழை குறைவாக உள்ளதால் நதிநீர் பங்கீடு குறித்து உச்சநீதிமன்றமும், காவேரி மேலாண்மை ஆனையமும் ஒரு தெளிவான தீர்வை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.