சென்னை: மார்க்ஸின் பிறந்தநாளில் எல்லோர்க்கும் எல்லாம் என்ற லட்சியப் பயணத்தில் வென்றிட உறுதிகொள்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றார். காரல் மார்க்ஸ் ஜெர்மனியில் 1818இல் பிறந்தார். பொதுவுடைமைக் கழக’த்தின் சிறு கிளையாக ‘கம்யூனிஸ்ட் சங்க’த்தை முதன்முதலில் அமைத்தவர் மார்க்ஸ். அந்தச் சங்கத்துக்கான செயல்திட்டத்தைப் போல ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’யை எங்கெல்ஸுடன் இணைந்து 1848இல் அவர் தயாரித்து அளித்தார். தன் சிந்தனையை அடிப்படையாகக்கொண்டு மார்க்ஸியக் கொள்கையையும் ‘மூலதனம்’ என்ற பெருநூலையும் படைத்தளித்தார்.
உலகம் முன்பைவிட மேம்பட்டதாக இருப்பதற்கு மார்க்ஸ் முன்வைத்த கொள்கைகள் காரணமாக இருந்திருக்கின்றன. பொருளாதாரம், வரலாறு, கலை – இலக்கியம், கல்வி, மருத்துவம், அரசு, சமூக மாற்றங்கள், மக்கள் புரட்சிகள், மக்களுக்கான இதழியல், கூட்டாகப் போராடும் உரிமை எனப் பல்வேறு துறைகளில் மார்க்ஸ் தாக்கம் செலுத்தியிருக்கிறார். சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியம், சம்பளத்துடன் கூடிய விடுமுறை, தொழிற்சங்கம் அமைத்துத் தொழிலாளர் உரிமைகளை பெறக்கூடிய வாய்ப்பு போன்றவை உலகத் தொழிலாளர்களுக்கு இன்றைக்குப் பரவலாகி இருப்பதற்கு மார்க்ஸும் காரணமாக இருந்திருக்கிறார்.
இந்த நிலையில் காரல் மார்க்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், சமத்துவ உலகைக் கட்டமைப்பதற்கான பொதுவுடைமைக் கருத்தியலை வழங்கிய காரல் மார்க்ஸ் பிறந்தநாளில், ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற இலட்சியப் பயணத்தில் வென்றிட உறுதிகொள்வோம்!உழைப்போர்க்கு உறுதுணையான மார்க்சியச் சிந்தனையை எடுத்து இயம்பிட, கன்னிமரா நூலக நுழைவு வாயிலில் அவரது திருவுருவச் சிலையினை நிறுவுவதற்கான இடத்தை நானே நேரில் சென்று தேர்வு செய்து, சிலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது! சிலையாக எழுந்து நிற்கவுள்ள மாமனிதர் மார்க்சின் சிந்தனைகள், மானிடச் சமுதாயத்துக்கு என்றும் ஒளி வழங்கட்டும் இவ்வாறு தெரிவித்தார்.