காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட விபத்தில் பால் ஏற்றிவந்த லாரியில் இருந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஈரோட்டிலிருந்து காரைக்குடி நோக்கி தனியார் பால் நிறுவனமானது பால் அனுப்பிவைப்பது வழக்கம். இந்த வண்டியை ஈரோட்டிலிருந்து ரூபன் என்ற ஓட்டுனருடன், ஆறுமுகம், கருணாகரன், தமிழ் செல்வன் ஆகிய 3 பேர் அந்த வண்டியில் பயணித்துள்ளனர்.
இவர்கள் நள்ளிரவு காரைக்குடி பைபாஸ் ரோட்டிலிருந்து ஊருக்குள் திரும்பும் வழியாக தேனாற்று பாலம் அருகே வரும் போது நிலைதடுமாறிய கன்டைனர் லாரி சரிந்து திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்து ஓட்டுநர் நாகராஜ் என்பவர் ஓட்டிவந்த பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் பால் ஏற்றி வந்த லாரியில் இருந்த ஆறுமுகம், கருணாகரன், தமிழ் செல்வன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பேருந்தை ஓட்டி வந்த நாகராஜ் உட்பட பேருந்தில் பயணித்த 16 பேர் காயமடைந்து காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து ஈரோட்டில் உள்ள இறந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போக்குவரத்துக்கு கழக அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.