காரைக்கால் : எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்து வருவது வழக்கம். இதனிடையே அவ்வாறு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து வருகின்றனர்.
இதேபோல் இலங்கை கடற்கொள்ளையர்களும் மீனவர்களை தாக்கி அவர்களது மீன்கள் மற்றும் வலைகளை பறித்து சென்று அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று பருத்தித் துறை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 2 படகுடன் 22 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரையும், யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.