குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசின் அனுமதி பெறாமல் மற்றும் பதிவு செய்யப்படாமல் நடத்தப்படும் பணிபுரியும் மகளிர் விடுதிகள்/மாணவியர் தங்கும் விடுதிகள்/இல்லங்கள் மற்றும் உறைவிடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் எச்சரித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்தப்படும் பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதிகள்/ இல்லங்கள்/உறைவிடங்கள், கல்லூரி மாணவியர் விடுதிகள் மற்றும் மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், ஜவுளிக்கடைகள் உள்ள மகளிர் விடுதிகள் அனைத்தும் உடனடியாக அரசிடம் பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், அறக்கட்டளைகள்/சங்கங்கள் மற்றும் மதம் சார்ந்த நிறுவனங்கள்/கல்லுாரிகள்/பயிற்சிநிறுவனங்கள்/தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள் மற்றும் நிறுவனங்கள்/தொழிற்சாலைகள் தனியார் மற்றும் தனிநபர் ஆகியோரால் நடத்தப்பட்டு வரும் பெண்கள் விடுதிகள் மற்றும் குழந்தைகள் இல்லங்கள்/பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்காலிகமாக நடத்தும் விடுதிகள் அனைத்தும் 31.08.2023-க்குள் The Tamil Nadu Hostels and Homes for Women and Children (Regulation) Act 2014-ன் கீழ் கண்டிப்பாக பதிவு செய்திட வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பதிவு உரிமம் வேண்டி வரப்பெற்றுள்ள விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. பதிவு உரிமம் கோரும் விண்ணப்பதாரர்கள் அரசின் https://tnswp.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்து அதன் நகலினை இணைத்து உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
பதிவு செய்யப்படாத விடுதிகள்/ இல்லங்கள் பதிவு உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்குமாறு பலமுறை பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனவே 31.08.2023-க்குள் விண்ணப்பிக்க தவறிய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிப்பதுடன் நிருவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.
பதிவு உரிமம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இணைப்பு கட்டடம் தரைத்தளத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் மற்றும் 18 வயதிற்கு கீழ் உள்ள பள்ளி குழந்தைகள் விடுதி மற்றும் குழந்தைகள் இல்லங்கள் பதிவிற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை தொடர்பு கொள்ளலாம் எனவும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.