Saturday, June 21, 2025
Home செய்திகள் கன்னியாகுமரி – காரோடு 4 வழி சாலையில் 18 கி.மீ தூரத்தில் 2வது சுங்கசாவடி

கன்னியாகுமரி – காரோடு 4 வழி சாலையில் 18 கி.மீ தூரத்தில் 2வது சுங்கசாவடி

by Lakshmipathi

*வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

நாகர்கோவில் : கன்னியாகுமரி- காரோடு நான்கு வழிச்சாலையில் திருப்பதிசாரத்தில் இருந்து சுமார் 18 கி.மீ தூரத்தில் 2வது டோல் பிளாசா (சுங்கசாவடி) அமைக்கப்பட்டு இருப்பது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.கன்னியாகுமரி – நாகர்கோவில்- காரோடு வரையில் 4 வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவிலில் இருந்து இந்த சாலை காவல்கிணற்றையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து காரோடு வரை மொத்தம் உள்ள 54 கி.மீ தொலைவில் ரயில்வே பாலம் மற்றும் தாமிரபரணியின் குறுக்கே பெரிய பாலங்கள் கட்டும் பணிகள் நிறைவு பெற்றாலும், மீதமுள்ள சிறிய பாலங்கள் மற்றும் சாலை அமைக்க மண் கிடைக்காமல் பணிகள் தடைபட்டன. இந்நிலையில் பணிகளை மேற்கொண்ட நிறுவனம் பணிகள் நடைபெறாமல் நஷ்டம் காரணமாக தனது ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

இதனால் நான்கு வழிச்சாலை திட்டம் பாதியில் நின்றது. பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.1041 கோடியே 30 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பணிகள் தொடங்கின. பால பணிகள், சாலை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

கோதை கிராமம், புத்தேரி, கணியாகுளம் இடைப்பட்ட பகுதிகளில் குளங்களுக்கு மேல் சிறு, சிறு பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன. புத்தேரி உள்பட 6 பெரிய குளங்களுக்கு மேல் பெரிய பாலங்கள் அமைகிறது. 2026 க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

காவல்கிணறு-நாகர்கோவில் நான்குவழி சாலையில் திருப்பதிசாரத்தில் டோல் பிளாசா அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இவை ஒருபுறம் இருக்க அந்த டோல்பிளாசாவில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் மற்றொரு டோல்பிளாசா நான்குவழி சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.

வில்லுக்குறி அருகேயுள்ள மணக்கரை என்ற பகுதியில் டோல்பிளாசா அமைக்கும் பணிகள் அந்த பகுதியில் சாலை பணிகள் நடைபெற்றபோதே நடந்து முடிந்துள்ளன. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நான்குவழி சாலை விதிமுறைகளை மீறி டோல்பிளாசா அமைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

மொத்தத்தில் 54 கி.மீ தூரமே வருகின்ற சாலையில் 2 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுவது விதிமுறைகளை மீறி செயல் என்றும், பயன்பாட்டிற்கு வரும் முன்னரே இந்த சுங்கச்சாவடியை திரும்ப பெற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

சுங்கச்சாவடி அமைக்க விதிமுறை

இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைப்பதற்கான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஆகியவற்றின் வழிகாட்டுதல்களின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளன.

இரண்டு சுங்கச்சாவடிகளுக்கு இடையே குறைந்தபட்சம் 60 கி.மீ இடைவெளி இருக்க வேண்டும். சுங்கச்சாவடி அமைப்பதற்கு முன், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அல்லது மாநில அரசின் பொது-தனியார் கூட்டாண்மை திட்டங்களின் கீழ் செயல்படும் முகமைகள் ஒன்றிய அரசின் அனுமதியைப் பெற வேண்டும்.

சுங்கச்சாவடி அமைப்பதற்கு முன், பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆட்சேபனைகள் மற்றும் கருத்துகள் பெறப்பட வேண்டும். இது தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகள், 2008 இன் பிரிவு 8ஏ இன் கீழ் கட்டாயமாகும்.

சுங்கச்சாவடி அமைக்கப்படும் இடத்தில் போதுமான வாகனப் போக்குவரத்து இருக்க வேண்டும். நகர்ப்புற எல்லைக்கு வெளியே சுங்கச்சாவடி அமைக்கப்பட வேண்டும். நகர்ப்புறப் பகுதிகளில் உள்ளூர் பயணிகளுக்கு சுங்கக் கட்டண விலக்கு அளிக்கப்பட வேண்டும்.

சுங்கச்சாவடி அமைப்பதற்கு புவியியல் ரீதியாக பொருத்தமான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். குறிப்பாக சமதளமான நிலப்பகுதி, வாகனங்கள் எளிதாக நிறுத்தப்படுவதற்கு ஏற்ற இடம் இருக்க வேண்டும். சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளுக்கு அடிப்படை வசதிகளாக கழிவறைகள், குடிநீர், ஓய்வு இடங்கள் இருக்க வேண்டும்.

சுங்க வசூல் நெடுஞ்சாலையின் நீளம், வாகன வகை (கார், பேருந்து, லாரி), மற்றும் திட்ட செலவு ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். உள்ளூர் குடியிருப்பாளர்கள், பள்ளி பேருந்துகள், அரசு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் போன்றவற்றுக்கு சுங்கக் கட்டண விலக்கு அளிக்கப்பட வேண்டும்.

2021 முதல், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பாஸ்டேக் மூலம் மின்னணு சுங்க வசூல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆர்எப்ஐடி அடிப்படையிலான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சுங்க வசூல் காலம் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக, பிஓடி திட்டங்களில் 15-30 ஆண்டுகள் வரை வசூல் செய்யப்படலாம்.

சுங்கச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள், வாகனங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும் கருவிகள், மற்றும் மின்னணு கட்டண வசூல் அமைப்புகள் இருக்க வேண்டும்.போதுமான விளக்கு வசதிகள், பாதுகாப்பு பணியாளர்கள், மற்றும் அவசரகால உதவி வசதிகள் இருக்க வேண்டும். வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்க, போதுமான பணியாளர்கள் மற்றும் பாதைகள் இருக்க வேண்டும்.

சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு தனியார் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும்போது, அவர்கள் ஒப்பந்த விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சுங்கச்சாவடி தொடர்பான புகார்களைத் தீர்க்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் புகார் மையங்கள் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi