காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட உயர்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளி வகுப்பறையில் மின்விசிறி, மின்விளக்குகள், கடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் சேதப்படுத்தி, மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தும்பவனம் தெருவில் ஏகேடி மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் வகுப்பறைகள் சேதமடைந்த நிலையில், அதன் மறுசீரமைப்பு பணியானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், இப்பள்ளி அருகாமையில் செயல்பட்டு வரும் உயர்நிலைப்பள்ளியில், தற்காலிமாக வகுப்புகளானது நடைபெறுகிறது. இங்கு, 300க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களும் வார விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. இந்த, விடுமுறை சாதமாக பயன்படுத்திக்கொண்ட சமூக விரோதிகள் சிலர், இரவோடு இரவாக பள்ளிக்குள் புகுந்து தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயிலக்கூடிய வகுப்பறையில் உள்ள மின் விசிறி, மின் விளக்குகள், கடிகாரம், எழுத்து பலகைகள், இருக்கைகள் போன்ற உபகரணங்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், விடுமுறையை முடிந்து வழக்கம்போல நேற்று முன்தினம் பள்ளியினை திறந்து வகுப்பறைக்குள்ளே சென்று பார்த்தபோது, வகுப்பறைக்குள் இருந்த அனைத்து பொருட்களும் சேதமடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், முதற்கட்டமாக சமூக விரோதிகள் பள்ளியின் அருகாமையில் உள்ள கோயில் சுவற்றில் ஏறி பள்ளிக்குள் வந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ள மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சமூக விரோத செயல்கள் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பள்ளிக்கு போதிய பாதுகாப்பு இல்லாததே இச்செயலுக்கு முக்கிய காரணமாக உள்ளதால், இப்பள்ளியில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றும் பெற்றோர்களின் கோரிக்கை வைத்துள்ளனர்.