காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் அறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா கேபிளில் ஏற்பட்ட மின்கசிவால், திடீரென மின்வயர் எரிந்து கரும்புகை சூழ்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், உள்நோயாளிகள், புறநோயாளிகள் என நாள்தோறும் 1000 கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு, அதன் கட்டுப்பாட்டு மையம் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது.
இந்த சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று ஏற்பட்ட மின்கசிவால், திடீரென மின்வயர்கள் தீப்பிடித்து எரிந்து, அலுவலகம் மட்டுமின்றி, மருத்துவமனை வளாகம் முழுவதும் கரும்புகை சூழந்து காணப்பட்டது. தகவலறிந்த காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.