காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார் நேரில் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் மற்றும் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை, மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் முன்னிலையில் காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு சிறப்பு அலுவலர் செந்தில்குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அந்த வகையில், வாலாஜாபாத் ஒன்றியம், குண்ணவாக்கம் ஊராட்சி மற்றும் பழையசீவரம் ஊராட்சியில் வனத்துறை சார்பில், தமிழ்நாடு உயிர் பண்ணை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மரகத பூஞ்சோலையை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு செய்து, அந்த இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து, பழையசீவரம் ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் குளம் வெட்டும் பணியினை ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து, உத்திரமேரூர் ஒன்றியம், வளத்தோடு கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், பயிரிட்டுள்ள தக்கைப்பூண்டு செடியினை பார்வையிட்டு, விவசாயிகளிடம் விவசாய பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மானாம்பதி ஊராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட அரசு சமுதாய சுகாதார நிலையத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.
இதனைதொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் ஆய்வு கூட்டம் நடத்தி, பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனைகளை வழங்கினர். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், மாவட்ட வன அலுவலர் ரவி மீனா, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ராஜ்குமார், வாலாஜாபாத், உத்திரமேரூர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.