காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செல்போன் கடையின் ஷட்டரை உடைத்து செல்போன்களை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் சுங்குவார்சத்திரம் பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு ஆப்பிள், ரெட்மி, ரியல்மீ, சாம்சங், விவோ போன்ற ரூ.53 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து உடனடியாக அப்துல் ரஹீம் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஆட்டோவில் வந்த மூன்று மர்ம நபர்கள் இரும்பு ஆயுதத்தின் மூலம் ஷட்டரை உடைப்பதும், பின்னர் இருவர் முகத்தை மறைத்துக் கொண்டு உள்ளே சென்று கடையில் உள்ள செல்போன்களை கோணி பையில் மூட்டை கட்டி ஆட்டோவில் எடுத்துச் செல்வதும் பதிவாகி இருந்தது. மேலும் இது குறித்து அப்துல் ரஹீம் அளித்த புகாரின் பேரில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், செல்போன் கடையின் ஷட்டரை உடைத்து செல்போன்களை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செல்போன்களை திருடிய ஹரியானாவை சேர்ந்த இம்ரான், ஜாபித், அலிஜன், ஹமீது ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான நான்கு பேரிடம் இருந்து 233 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.