Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.55 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிப்பு வீடு மீட்பு: இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.55 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிப்பு வீட்டினை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் மீட்கப்பட்டது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான வீடு ஒன்று மேற்கு மாடவீதி பகுதியில் உள்ளது. சுமார் ரூ.55 லட்சம் மதிப்பிலான இந்த வீட்டை கோயிலில் பணிபுரிந்த ராமச்சந்திர சாஸ்திரி என்பவர் வாடகைக்கு எடுத்து குடியிருந்து வந்துள்ளார்.

இந்த, வீட்டில் குடியிருக்கும் ராமச்சந்திர சாஸ்திரி, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டிற்கு வாடகை செலுத்தாமல் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதுகுறித்து, கோயில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ராமச்சந்திரா சாஸ்திரி மீது வழக்கு தொடுத்து ஆக்கிரமிப்பு செய்துள்ள வீட்டை காலி செய்வதற்கான ஆணையை பெற்றனர்.

இதனைத்தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில், காமாட்சியம்மன் கோயில்  செயல் அலுவலர் சீனிவாசன், மேலாளர் பத்ரி நாராயணன், பல்வேறு கோயில்களின் செயல் அலுவலர்கள் கதிரவன், ராஜமாணிக்கம், கேசவன், முத்துலட்சுமி, பூவழகி கோயில் ஆய்வாளர்கள், கோயில் பணியாளர்களுடன் ஆக்கிரமிப்பு செய்துள்ள வீட்டிற்கு வந்தனர்.

பின்பு, போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு செய்திருந்த வீட்டை அதிரடியாக கோயில் பணியாளர்கள் உதவியுடன் காலி செய்து பொருட்களை லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர். பின்னர், ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட வீட்டினை பூட்டி சீல் வைத்து அறிவிப்பு பலகையினை வைத்துவிட்டு சென்றனர். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்ட சம்பவம் காரணமாக காமாட்சியம்மன் கோயில் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.