சென்னை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனும், சுவாமியும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி 4 மாசி வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று காலை நடைபெற்றது. இதைதொடர்ந்து காலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 12ம்தேதி அதிகாலை 5.45 மணிக்கு மேல் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகிறார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்வார்கள்.
இதன் காரணமாக சென்னை – மதுரை இடையே முதல் முறையாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மே.10 இரவு 11:30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.55 மணிக்கு மதுரை சென்றடையும்; மே 12ம் தேதி இரவு 11.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை தாம்பரம் சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.