Tuesday, April 23, 2024
Home » கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் 2 ஆசிரியர்கள் பெயர் வழக்கில் இருந்து நீக்கம்: தாய் குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் 2 ஆசிரியர்கள் பெயர் வழக்கில் இருந்து நீக்கம்: தாய் குற்றச்சாட்டு

by Karthik Yash

விழுப்புரம்: மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் 2 ஆசிரியர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக மாணவியின் தாய் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி ஆசிரியைகளான கிருத்திகா, ஹரிப்ரியா உள்ளிட்ட 5 பேர் மீது 1,150 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை கடந்த 15ம் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர்.

அதில், ‘கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தற்கொலையே, பாலியல் தொந்தரவு, கொலைக்கான ஆதாரம் இல்லை. பள்ளி தாளாளர், செயலாளர், ஆசிரியர்களின் துன்புறுத்தல் எதுவும் இல்லை. குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் மாணவி இறப்புக்கு காரணம் இல்லை’ என்று சிபிசிஐடி தெரிவித்து இருந்ததாக தகவல் வெளியானது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில் விரைவில் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்க உள்ளது. இந்நிலையில் நேற்று ஸ்ரீமதியின் தாய் செல்வி விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு வருகை தந்து தனது மகள் மரணம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையின் நகலை தனக்கு வழங்க கோரி மனு வழங்கினார். அப்போது சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி. கோமதி, நேரடியாக குற்றப்பத்திரிக்கை நகலை உங்களிடம் வழங்க தங்களுக்கு அதிகாரமில்லை. இதுதொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத்தை நேரில் அணுகிடுமாறும் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தாய் செல்வி கூறுகையில், ‘இந்த வழக்கில் இருந்து பள்ளி ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்ரியா ஆகியோரை நீக்கியுள்ளனர். இதுதொடர்பாக எங்களுக்கு சிபிசிஐடி போலீசார் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆசிரியர்கள் பெயர் நீக்கம் தொடர்பாக வரும் 5ம் தேதி எனது கருத்தை தெரிவிக்குமாறு விழுப்புரம் நீதிமன்றம் கடந்த 22ம் தேதி எனக்கு மனு அனுப்பியுள்ளது. குற்றப்பத்திரிக்கையில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் நீதிமன்றத்தில் நான் எப்படி கருத்தை தெரிவிக்க முடியும். ஒருதலைப்பட்சமாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். சிபிசிஐடி போலீசாரின் விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. ஒரு நபர் விசாரணை கமிஷன் நியமிக்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளேன்’ என்று தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

4 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi