கள்ளக்குறிச்சி: கனியாமூர் தனியார் பள்ளி கலவரத்தின்போது பள்ளி கட்டிடம் மற்றும் பள்ளி பேருந்துகளுக்கு தீவைக்கப்பட்ட வழக்கு ெதாடர்பாக 499 ேபர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜராகினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி மதி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து அப்பள்ளி வளாகத்தில் இவரது மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறி வன்முறையில் முடிந்தது. காவல்துறை வாகனங்கள் தீவைக்கப்பட்டது. போலீஸ் மீது கல்வீசப்பட்டது. இதுதொடர்பாக மொத்தம் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அதில் 53 சிறார்கள் உள்பட மொத்தம் 916 பேர் மீது 41 ஆயிரத்து 250 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தாக்கல் செய்தனர். இதில் தனியார் பள்ளி கலவரத்தின்போது அந்த பள்ளியின் கட்டிடத்துக்கு தீவைத்து கொளுத்தியது, அப்பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பள்ளி பேருந்துகளுக்கு தீவைக்கப்பட்ட விவகாரத்தில் முதல் நபராக இறந்துபோன மாணவி மதியின் தாய் செல்வி, 2வது நபராக விசிக கடலூர் மாவட்ட செயலாளர் திராவிடமணி, 3வது நபராக மாணவியின் உறவினர் சபரிநாதன், 4வது நபராக மாணவியின் தாய் மாமன் செந்தில்முருகன் உள்பட 615 பேர் மீது கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இவ்வழக்கு முதல் முறையாக நேற்று கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 615 பேர்களில் செல்வி, திராவிடமணி உள்பட 499 பேர் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.2ல் நீதிபதி ரீனா முன்னிலையில் ஆஜராகினர். பல்வேறு காரணங்களால் 116 பேர் ஆஜராகவில்லை. வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி இவ்வழக்கை வருகிற ஜூலை 17ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.