சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து, அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியது. ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நவம்பர் 10ம் தேதிக்கு பின்னர் ரூ.1000 வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி, கடந்த செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி இந்த திட்டம் தமிழகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில், களஆய்வு செய்யப்பட்டு 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தகுதியானவர்கள் என தமிழக அரசு தேர்வு செய்தது. இவர்களுக்கு கடந்த இரண்டு மாதமாக தலா ரூ.1000 அவர்களது வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக விண்ணப்பித்து, அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால், நியாயமான காரணம் இருந்தால் அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.
இதை ஏற்று, தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25ம் தேதி வரை சுமார் 11.85 லட்சம் பேர் ரூ.1000 கேட்டு மீண்டும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் விண்ணப்பங்களை தமிழக அரசின் வருவாய்த்துறை அதிகாரிகள் களஆய்வு செய்தனர். அதன்படி, இவர்களில் 8 லட்சம் பேர் ரூ.1000 உரிமைத் தொகை பெற தகுதிவாய்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் இன்று முதல் குறுஞ்செய்தி அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன.விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது. புதிதாக மகளிர் உரிமைத் தொகை பெறுபவர்களுக்கு வரும் 10ம் தேதி முதல் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட உள்ளது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் மரக்காணத்தில் தொடங்கி வைக்க இருக்கிறார்.