சென்னை: அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமியை கட்சியிலிருந்து நீக்கியது தொடர்பான ஆவணத்தை தாக்கல் செய்யுமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக கட்சியின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமிக்கு எதிராக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தன்னை பற்றி தெரிவித்த கருத்துகள் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி எடப்பாடி பழனிசாமி மீது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கே.சி.பழனிசாமியின் அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அய்யப்பராஜ், அதிமுகவின் பொது செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே கட்சியிலிருந்து கே.சி.பழனிசாமி நீக்கப்பட்டார் என்றார். இதையடுத்து நீதிபதி, கட்சியில் இருந்து கே.சி.பழனிசாமியை நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான கட்சியின் பத்திரிகையின் அறிவிப்பு உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.