சென்னை: அபகரிக்கப்பட்ட அரசின் நிலங்களை மீட்க வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: கோவையில் ரூ.230 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அரசியல் செல்வாக்கு, பண பலம் படைத்த சிலர் அபகரித்து கட்டிடம் எழுப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அபகரிக்கப்பட்ட நிலத்தை உடனடியாக மீட்க வேண்டுமெனவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நில அபகரிப்பு நடந்துள்ள விதம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
பண பலம், அதிகார பலம், அரசியல் பலமிக்கவர்கள் பல்வேறு கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்து கட்டிடங்கள் கட்டியுள்ளதையும், அவர்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்துள்ளதையும் அரசு அதிகாரிகள் கண்டும், காணாமல் இருப்பது ஏற்புடையதல்ல. எனவே, கோவை நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் மீதும், உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அபகரிக்கப்பட்ட அரசு நிலங்களை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். அதேபோல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மட்டுமின்றி அவர்களுக்கு துணை புரிந்த அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்வது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.