தமிழக சட்டப் பேரவையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பென்னாகரம் ஜி.கே.மணி (பாமக) பேசியதாவது: ஒரு முழுமையான மனிதனை நல்லொழுக்கமுள்ளவனாக, நாட்டுப்பற்றுடையவனாக, சேவை நோக்கமுள்ளவனாக, முழு மனிதனாக உருவாக்குவது கல்வி. ஆனால், அதைவிட்டு மாணவச் செல்வங்கள் திசைமாறி செல்வதற்கு காரணம் இன்று கைப்பேசியில் உள்ள ஊடகங்கள். பல்வேறு துறைகளில் மாணவர்களை ஈர்த்து முழு மனிதனாக உருவாக்காமல் மாணவனை திசைமாறி செல்லக்கூடிய நிலைக்கு உருவாக்குகிறது.
எனவே, பள்ளி வகுப்பறையில் ஒரு மாணவனை முழுமையாக மனிதனாக உருவாக்குவதற்கு நீதிபோதனை வகுப்பு வேண்டுமென்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அது கட்டாயமாக்கப்பட வேண்டும். இது மாணவர்களுக்கு நலன் பயக்கும். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி: நீதிபோதனை வகுப்பு வேண்டும் என்று உறுப்பினர் ஜி.கே.மணி கேட்டு இருக்கிறார். துறைசார்ந்த அறிவிப்பில், அது சார்ந்த நல்ல செய்தி வரும்.