Thursday, June 12, 2025
Home மருத்துவம்ஆலோசனை மூட்டு வலி கேள்விகளும் இயன்முறை மருத்துவ பதில்களும்!

மூட்டு வலி கேள்விகளும் இயன்முறை மருத்துவ பதில்களும்!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

கிராமம் தொடங்கி பெருநகரம் வரை, ஏழை தொடங்கி பணக்காரர் வரை, எந்தவித பாகுபாடும் இல்லாமல் இன்றைய அவசர உலகில் ஒருவர் நாற்பது வயதை நெருங்கும் போதே உடலில் பல்வேறு பிரச்னைகள் எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிடுகிறது. அதில் மிக முக்கியமானதாக மூட்டு வலியினைச் சொல்லலாம். மூட்டு வலி வர பல காரணங்கள் உண்டு.

முக்கியமான மூட்டுகளான தோள்பட்டை, முழங்கை மூட்டு, இடுப்பு மூட்டு, முழங்கால் மூட்டு, கணுக்கால் மூட்டு, முதுகுத் தண்டுவட மூட்டுகள் என இந்த மூட்டுகளில் வரும் பிரச்னைகள் சார்ந்து பலருக்கும் பல கேள்விகள் இருக்கும். அவ்வாறு சிலர் என்னிடம் கேட்ட கேள்விகளுடன், இவை சார்ந்த இன்னும் சில கேள்விகளையும் இணைத்து எல்லோருக்கும் பயன்படுமாறு இங்கே கேள்வி-பதில் வடிவில் பகிர்கிறேன். இது அனைவருக்கும் விழிப்புணர்வோடு செயல்பட பெரிதும் உதவக்கூடும்.

*முழங்கால் வலி வந்ததுனால சுத்தி இருக்கவங்க எல்லோரும் கீழே உட்காரக் கூடாதுன்னு சொல்றாங்களே… சாப்பிடும் போது கூட கீழே உட்காரக் கூடாதா?

தாராளமாக அமரலாம். முழங்கால் வலியை பொறுத்தவரை ஆரம்பம் முதலே நல்ல சிகிச்சை எடுத்தால் போதும். கீழே அமர்வது உடலுக்கும், மூட்டுக்கும் நல்ல பயிற்சி. ஆகையால் அதை விட்டுவிடாதீர்கள். ஒரு நாளைக்கு குறைந்தது பத்து தடவையாவது கீழே உட்கார்ந்து எழுவது நல்லது.

*சர்க்கரை அளவு அதிகமானதால்தான் தோள்பட்டை வலிக்கிறதா… கையினை தூக்க முடியாமல் சிரமமாய் உள்ளது. இதற்கு சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைத்தால் மட்டும் போதுமா?

இந்த தோள்பட்டை வலிக்கு ‘இறுகிய தோள்பட்டை’ (Frozen Shoulder) என்று பெயர். இந்த வகை பிரச்னையில் தோள் மூட்டு வலியோடு சேர்ந்து மூட்டு இறுக்கம் பெற்றுக்கொண்டே வரும். ஒரு கட்டத்தில் கையினை தூக்கி வேலைகளை செய்ய முடியாதது போல ஆகும். குறிப்பிட்ட சில உடற்பயிற்சிகள் செய்வதால் மட்டும்தான் இறுக்கத்தை தவிர்க்க முடியும். நாற்பதை கடந்த யாருக்கு வேண்டுமானாலும் இந்தப் பிரச்னை வரும். எனினும், சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு வரும் சதவிகிதம் அதிகம்.

*மூன்று மாதத்திற்கு முன்பு வண்டியில் இருந்து கீழே விழும் போது கணுக்காலில் சுளுக்கு பிடித்துக் கொண்டது. இப்போது இந்த வலி இன்னும் அதிகமாகி அடிக்கடி கால் ஸ்திரம் இல்லாமல் கீழே விழுகிறேன். என்ன பிரச்னையாக இருக்கும்?

கணுக்கால் மூட்டில் உள்ள ஜவ்வுகள் காயமாவதைத்தான் சுளுக்கு என்கிறோம். இப்படி ஒரு தடவை சிறிய காயம் ஆகும்போது அதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் அது குணமாகாமல் மேலும் கிழியத் தொடங்கும்.

அதனால் ஸ்திரத்தன்மை குறைந்துவிடும். ஒரு தடவை விழுந்து சுளுக்கு ஏற்பட்டவுடன் இயன்முறை மருத்துவரை அணுகி போதுமான சிகிச்சை எடுக்கும் போது இவ்வகை பிரச்னைகளை முற்றிலும் தடுக்க முடியும்.

*முழங்கை வலி திடீரென வந்தது, அதற்குப் பின் வாசல் தெளிக்க, கடைக்கு சென்று பைகளை சுமந்து வர, சமைக்கும் போது என ஒவ்வொரு வேலை செய்யும் போதும் வலி உள்ளதே… இதற்கு என்ன தீர்வு?

இந்த வலிக்கு ‘டென்னிஸ் எல்போ’ (Tennis Elbow) என்று பெயர். அதிகப்படியாக கைகளுக்கு தொடர்ந்து வேலைகள் கொடுக்கும் போது அழுத்தம் தாங்காமல் வரும் வலி. வலியினை குறைத்து உள் காயம் ஆறுவதற்கு இயன்முறை மருத்துவம் அவசியம். பின் நாம் வீட்டில் வேலைகளுக்கு கொஞ்ச நாள் ‘குட்-பை’ சொல்லிவிட்டு கைக்கு ஓய்வு கொடுக்கும் போது பரிபூரண தீர்வு கிடைக்கும்.

*எங்கள் பாட்டி குளியல் அறையில் இருந்து கீழே விழுந்து ஒரு மாதம் ஆகிறது. இடுப்புப் பகுதியில் வெளிக்காயமும் இல்லை வலியும் இல்லை என்பதால் அப்படியே விட்டுவிட்டோம். ஆனால் போன வாரம் வலி அதிகப்படியாக இருக்கிறது என மருத்துவரிடம் சென்றதற்கு அறுவை சிகிச்சை செய்ய சொல்லி இருக்கிறார்கள். இது அவசியமா?

இடுப்பு எலும்பில் (Hip Bone) கீழே விழுந்து காயம் ஏற்பட்டால் அங்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, அந்த குறிப்பிட்ட மூட்டு மட்டும் அழுகும் அபாயம் உள்ளது. எனவே அழுக ஆரம்பித்துவிட்டால் அறுவை சிகிச்சை செய்து பாதிக்கப்பட்ட மூட்டினை அகற்றிவிட்டு செயற்கை மூட்டினை பொருத்துவர். இந்த வகை சிகிச்சையால் நன்மை மட்டுமே விளையும்.

*வயதானால் தானே கழுத்து வலி வரும்… எனக்கு இருபத்தி ஏழு வயதுதான் ஆகிறது. மேலும் நான் ஐடி ஊழியர் போல ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர் இல்லை. பின் ஏன் கழுத்தில் பிரச்னை வந்துள்ளது?

பொதுவாக பதின் பருவத்திலிருந்தே கழுத்து வலி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். மேலும் நீண்ட நேரம் அமர்ந்திருப்பவருக்குதான் கழுத்து வலி வரும் என்பது இல்லை. உங்கள் தசை ஆரோக்கியத்தை பொருத்தே மூட்டுகளின் ஆரோக்கியம் அமையும் என்பதால், இருபது வயதிற்கு மேல் உள்ளவர்கள் கட்டாயம் உடற்பயிற்சிகள் செய்துகொண்டால் பல பிரச்னைகளை தடுக்கலாம்.

*இரண்டு வருடத்திற்கு முன் முதுகு வலி வந்தபின் வண்டி ஓட்டுவதையும், நடைப்பயிற்சிக்கு செல்வதையும் நிறுத்திவிட்டேன். இருந்தும் முதுகு வலி அவ்வப்போது வருவது ஏன்?

அதீத முதுகு வலி இருக்கும் போது வண்டி ஓட்டுவதையும், நடைப் பயிற்சியையும் தவிர்த்துக் கொள்ளலாம். மற்றபடி இவற்றை நிறுத்தினால் முதுகு வலி வரவே வராது என்பது உண்மை அல்ல. முதுகு வலி வந்த பின் இயன்முறை மருத்துவர் பரிந்துரைக்கும் பயிற்சிகளை செய்துகொண்டால் போதும். பின் முதுகு வலியும் வராது, உங்கள் வழக்கங்களையும் நீங்கள் நிறுத்த வேண்டிய அவசியம் இராது.

* முழங்கால் முட்டி ஜவ்வு கிழிந்துவிட்டது என அறுவை சிகிச்சை செய்து ஒரு வருடம் ஆகிறது. ஆனால் இன்னும் கால் முட்டியை முழுமையாக மடக்க முடியவில்லை. ஏன், இதற்கு என்ன செய்வது?

பலரும் ஜவ்வு பிரச்னைக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் முற்றிலும் குணமடைந்துவிட்டது என நினைப்பர். ஆனால் முதல் மூன்று மாதத்திற்குள் பயிற்சி எடுத்துக்கொண்டு முட்டியினை முற்றிலும் மடக்கி நீட்டினால் மட்டுமே அறுவை சிகிச்சை பலன் அளிக்கும் என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை.

*உட்காரும் இடத்தில் பதினைந்து நாட்களாக வலி இருக்கிறது. மாத்திரை எடுத்தும் கேட்கவில்லை. என்ன செய்வது?

உட்காரும் இடத்தில் உள்ள ஒரு சிறு எலும்பும், அதன் ஜவ்வுகளும் காயமாகும் (Injury) போது இப்படி வலி வரும். இதனை மருத்துவத்தில் ‘காக்சிடைனியா’ (Coccydynia) எனக் கூறுவோம். இயன்முறை மருத்துவம் எடுத்துக்கொள்வதும், வீட்டில் அகலமான பாத்திரத்தில் (tub) வெதுவெதுப்பான நீர் ஊற்றி, வலி இருக்கும் இடத்தில் நன்கு நீர் படும்படி அமர வேண்டும். இப்படி செய்து வர வலி முற்றிலும் குறைந்துவிடும்.

*இன்னும் இரு மாதங்களில் குழந்தை பிறக்கப் போகிறது. இதுவரை உடற்பயிற்சிகள் செய்ததில்லை. ஆனால் முதுகு வலி உள்ளது. எப்படி சரி செய்வது?

குழந்தை பிறந்த மூன்று மாதம் கழித்து அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகி உடற்பயிற்சிகள் கற்றுக்கொண்டு தொடர்ந்து செய்து வர வேண்டும். இப்படி செய்து வருவதால் நிச்சயம் முதுகு வலியிலிருந்து நூறு சதவிகிதம் விடுபட முடியும்.

மொத்தத்தில் இந்தக் கேள்விகளில் ஒன்றாவது உங்கள் மனதிலோ அல்லது உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மனதிலோ ஒரு தடவையாவது தோன்றி இருக்கும். அதற்கான விடையும் இப்போது இங்கே உங்களுக்குக் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். ஆகையால் இயன்முறை மருத்துவ உதவி கொண்டு என்றும் ஆரோக்கியமாக இருக்க எனது வாழ்த்துகள்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi