லத்தேஹர்: ஜார்க்கண்டில் ஜேஜேஎம்பி தலைவர் பாப்பு லோஹ்ரா உட்பட இரண்டு மாவோயிஸ்ட்டுகள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜார்க்கண்டின் லத்தேஹர் மாவட்டத்தில் மாவோயிஸ்டில் இருந்து பிரிந்த குழுவான ஜார்க்கண்ட் ஜன் முக்தி பரிஷத் தலைவரான லோஹ்ரா மற்றும் அவரது கூட்டாளி ஆகியோர் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதில் லோஹ்ரா தலைக்கு போலீசார் ரூ.10லட்சம் சன்மானம் அறிவித்து இருந்தனர் . இவர் கொலை, ஆள்கடத்தல் உட்பட 98 வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து சிஆர்பிஎப் மற்றும் ஜார்க்கண்ட் காவல்துறை இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சூட்டில் லோஹ்ரா உட்பட இரண்டு மாவோயிஸ்ட்டுக்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் இருந்து லோஹ்ரா மற்றும் கஞ்சு ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் இதில் காயமடைந்த நிலையில் கைதான ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாவோயிஸ்ட்டுக்கள் தாக்கியதில் காயமடைந்த வீரர் அவாத் சிங் விமானம் மூலமாக ராஞ்சி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். சம்பவ இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.