ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டம் பஹோகுந்தர் கிராமத்தை சேர்ந்த புத்தநாத் சிங். இவருக்கும் சுனிதா (22) என்ற பெண்ணுக்கும் கடந்த 36 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சில தினங்களில், ‘புத்தநாத்தை எனக்கு பிடிக்கவில்லை. அவருடன் என்னால் வாழ இயலாது’ என்று உறவினர்களிடம் சுனிதா கூறியிருக்கிறார். இருப்பினும், எந்த பிரச்னையும் இல்லாதது போல், அந்த பெண்ணின் குடும்பத்தினர், சுனிதாவை அவரது கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சுனிதா, கணவருக்கு சாப்பாடு பறிமாறும்போது, அதில் விஷத்தை கலந்துள்ளார். அந்த உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி வந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புத்தாசிங், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து புத்தாசிங்கின் தாயார் போலீசில் புகார் செய்தார். அதில், எனது மருமகள்தான், எனது மகனை கொலை செய்தார்’ என்று தெரிவித்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி சுனிதாவை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.