கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் எஸ்டேட், பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசார் மறு விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான் மற்றும் அமமுக பிரமுகர் கர்சன் செல்வம் ஆகியோரிடம் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் தனித்தனியாக விசாரணை நடைபெற்றது.
கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனுக்கு கோவை சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில், அவரை வரும் 6ம் தேதி கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.