சென்னை: அனைவரது மனதிலும் ஜெயலலிதாவின் நினைவு நிலைத்திருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா இன்று (பிப்.24) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த், போயஸ் கார்டனில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்குச் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வேண்டும் என்ற ஜெ., தீபா அழைப்பை ஏற்று வந்தேன். இதற்கு முன்பு 3 முறை வேதா இல்லத்திற்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்துள்ளேன். 4வது முறையாக வேதா இல்லத்திற்கு வருகிறேன். 1977ல் அவரை பார்க்க முதல் முறையாக வந்திருந்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதாக ஒரு திட்டம் இருந்தது. அப்போது அவர் பார்க்க விரும்புவதாக கூறினார். அப்போது வந்திருந்தேன். 2ம் முறை ராகவேந்திரா திருமண மண்டபம் திறப்பு விழாவுக்கு அழைக்க வந்தேன்.
3ம் முறை மகள் திருமணத்துக்கு அழைக்க வந்தேன். இது நான்காம் முறை அவர் இல்லாவிட்டாலும் அவரது நினைவு மக்கள் மனதில் நிலைத்திருக்கும். அவரது இனிப்பான சுவையான நினைவுகளோடு இருக்கும். அவர் நாமம் வாழ்க என்று கூறினார்.