Thursday, March 28, 2024
Home » ஜப்பான் நாட்டை சேர்ந்த 6 நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

ஜப்பான் நாட்டை சேர்ந்த 6 நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

by Karthik Yash

சென்னை: ஜப்பான் நாட்டை சேர்ந்த 6 நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செய்யப்பட்டன. சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார். கடந்த 23ம் தேதி சிங்கப்பூர் சென்ற முதல்வர், தனது 2 நாள் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது ஜப்பானில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, நேற்று காலை டோக்கியோவில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார். தொடர்ந்து, நேற்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த 6 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விவரங்கள்:
1. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், கியோகுட்டோ சாட்ராக் நிறுவனத்திற்கும் இடையே, காஞ்சிபுரம் மாவட்டம், மாம்பாக்கத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் 13 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.113 கோடியே 90 லட்சம் முதலீட்டில் டிரக் வாகனங்களுக்கான பாகங்கள் உற்பத்தி செய்வதற்கான புதிய ஆலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
2. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், மிட்சுபா நிறுவனத்திற்கும் இடையே திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் மிட்சுபா இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன தொழிற்சாலையை ரூ.155 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்.
3. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஷிமிசு நிறுவனத்திற்கும் இடையே கட்டுமானம், கட்டுமான பொறியியல் மற்றும் அதன் தொடர்புடைய வணிகத்தை தமிழ்நாட்டில் மேற்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்.
4. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், கோயீ நிறுவனத்திற்கும் இடையே, ரூ.200 கோடி முதலீட்டில், பாலிகார்பனேட் தாள் தயாரித்தல், கூரை அமைப்புகள் தயாரித்தல், கட்டுமான துறையில் பயன்படுத்த எலக்ட்ரானிக் கூறுகளுக்கான எக்ஸ்ட்ருஷன் லைன்கள் ஆகியவற்றை தயாரிப்பதற்கான தொழிற்சாலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
5. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சடோ-ஷோஜி மெட்டல் வர்க்ஸ் நிறுவனத்திற்கும் இடையே, ரூ.200 கோடி முதலீட்டில் விண்வெளி, பாதுகாப்பு மற்றும் கட்டுமான உபகரணங்கள் துறையில் பயன்படுத்தப்படும் உயர்தர எக்கு பாகங்கள் உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலையை நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்.
6. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், டஃப்ல் நிறுவனத்திற்கும் இடையே, ரூ.150 கோடி முதலீட்டில் சோலார், எக்கு ஆலைகள், விண்வெளி மற்றும் குறைக்கடத்தி தொழில்களுக்கான துரு பிடிக்காத எக்கு சிறப்பு நெகிழ்வான குழல்களை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலையை நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் என மொத்தம் ரூ.818.90 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு, கியோகுட்டோ சாட்ராக் நிறுவனத்தின் தலைவர் சடோஷி ஒகோமோட்டோ, மிட்சுபா இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் கோஜி மிசுனோ, ஷிமிசு நிறுவனத்தின் துணை பொது மேலாளர் ஹிடோஷி இசாவா, துணை இயக்குநர் மட்சுனாகா கசுநோரி, பாலிஹோஸ் நிறுவனத்தின் கூட்டு நிறுவனங்களான கோயீ நிறுவனத்தின் தலைவர் யோஷிஹிகோ சுஷிஹாசி, சடோ-ஷோஜி மெட்டல் வர்க்ஸ் நிறுவனத்தின் பிரிவு மேலாளர் அகினோ மியாசி, டஃப்ல் நிறுவனத்தின் செயல் அலுவலர் யோச்சி ஓடா பாலிஹோஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஒய்.ஜெ.ஷபீர், இயக்குநர் ஹதிம் ஷபீர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

* காஞ்சிபுரம் மாவட்டம், மாம்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் 13 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.113.90 கோடி முதலீட்டில் டிரக் வாகனங்களுக்கான பாகங்கள் உற்பத்தி செய்ய புதிய ஆலை நிறுவ ஒப்பந்தம்.
* திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பூங்காவில் நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையை ரூ.155 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்ய ஒப்பந்தம்.
* ரூ.200 கோடி முதலீட்டில் விண்வெளி, பாதுகாப்பு மற்றும் கட்டுமான உபகரணங்கள் துறைக்கான உயர்தர எக்கு பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நிறுவ ஒப்பந்தம்.

You may also like

Leave a Comment

nine − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi